திரையரங்கம் திறப்பு... விரைவில் நல்ல முடிவு - கடம்பூர் ராஜு உறுதி !

By manimegalai aFirst Published Sep 5, 2020, 4:36 PM IST
Highlights

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்கிற விடை தெரியாத கேள்விக்கு, விரைவில் நல்ல முடிவு வரும் என, நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜு. 
 

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்கிற விடை தெரியாத கேள்விக்கு, விரைவில் நல்ல முடிவு வரும் என, நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜு. 

கொரோனா பிரச்சனையால்  திரைத்துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. திறக்கபடாத தியேட்டர்கள், முழுவதுமாக முடிந்த பிறகும் திரைக்கு வர முடியாத திரைப்படங்கள், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு என பல பிரச்சனைகள் சுழட்டி அடிக்கிறது. கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் கொஞ்சமாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என டாப் ஹீரோ, ஹீரோயினுக்கு கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மறுபுறமே தியேட்டர் உரிமையாளர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அதாவது தியேட்டர்களை நம்பி பிழைத்து வரும் 10 லட்சம் குடும்பங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என முதலமைச்சரிடம் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் முதல் மிட்ட தட்ட 5 மாதத்திற்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளதால், பொன்மகள் வந்தாள், பெண் குயின் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது. மேலும்  பல படங்கள் ஆன்லைனில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆன்லைன் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக அதிகப்படியான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால், இந்த மாதம் முதல் வழக்கம் போல், பேருந்துகள் ஓட துவங்கியுள்ளது. மாணவர்கள் நலன் கருதி கல்வி நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடமான திரையரங்கம் திறக்க மட்டும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது நாடு முழுவதும் எப்போது திரையரங்குகளை திறப்பது என்பது குறித்து வரும் 8ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரையரங்க உரிமையாளர்களுடன் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு இந்த ஆலோசனையை நடத்துகிறது. இந்த ஆலோசனையின் முடிவில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளி வரலாம் என்கிற தகவல் இன்று காலை வெளியான நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது... திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்ட போது, விரைவில் நல்ல முடிவு வரும் என உறுதியாக கூறியுள்ளார்.

எனவே மத்திய அரசின் ஆலோசனைக்கு பின், திரையரங்குகள் திறக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது.                                                                     

click me!