Jai Bhim: நடிகர் சூர்யாவுக்கு தொடரும் மிரட்டல்கள்.. சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..!

By Asianet TamilFirst Published Nov 16, 2021, 10:32 PM IST
Highlights

சூர்யாவுக்கு பாமக, பாஜகவினரிடமிருந்து வரும் மிரட்டல்களைத் தடுக்க வேண்டும் அதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளும் வலியுறுத்தின. 
 

ஜெய்பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் தொடரும் நிலையில், சென்னையில் உள்ள அவருடைய வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஞானவேல் இயக்கத்திலும் சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். படம் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், உண்மையான சம்பவத்தில் ராஜ்கண்ணுவை கொடூரமாக அடித்து கொலை செய்த அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியது, வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி கலச காலாண்டர் இடம்பெற்றது போன்றவை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரண்டுள்ளனர். 

காலண்டர் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுபோதிலும் பிரச்னை ஓயவில்லை. நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியதும் அந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவின் பதில் கடிதமும் சூடானது. இந்நிலையில் நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக அறிவித்தது சர்ச்சையானது. அந்த சர்ச்சை முடிவதற்குள் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டது. மேலும் சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பாமகவினர் தொடர்ந்து ஆபாசமாகப் பதிவிட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கிடையே அக்னி கலச காலாண்டருக்குப் பதில் மகாலட்சுமி காலாண்டர் மாற்றப்பட்டதற்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏசு நாதர் காலாண்டரை மாட்டாமல் மகாலட்சுமி காலாண்டரை மாற்றியது ஏன் என்று பாஜகவினரும் சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் தாக்கி எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்நிலையில் சூர்யாவுக்கு பாமக, பாஜகவினரிடமிருந்து வரும் மிரட்டல்களைத் தடுக்க வேண்டும் அதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளும் வலியுறுத்தின. 

இந்நிலையில் சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு  போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் கருத்து தெரிவித்து வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை சென்னை மாநகர போலீஸ் வழங்கியுள்ளது.

click me!