“சூர்யா குடும்பம் மட்டும் பொழச்சா போதுமா?”... பொங்கி எழுந்த பிரபல தியேட்டர் உரிமையாளர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 27, 2020, 3:22 PM IST
Highlights

 ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் சத்தமே இல்லாமல் இருந்த கோலிவுட்டில் தற்போது ஜோதிகாவின் "பொன்மகள் வந்தாள்" படம் பற்றவைத்த சர்ச்சை கொழுந்துவிட்டு எரிகிறது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. தற்போது வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சமூக இடைவெளி ஒன்றே சரியானது என்பதால் தான்  பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. தற்போது தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

கொரோனா பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரிலீஸுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டாலும் வழக்கம் போல் தியேட்டர்களுக்களில் கூட்டத்தை பார்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பல படங்கள் OTT எனப்படும்  ஆன்லைன் முறையில் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய முட்டி மோதி வருகின்றன. 

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கோவில்களைப் பற்றி பேசிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்கள், நன்றாக பராமரிக்கிறீர்கள் ஆனால் பள்ளிக்கூடம், மருத்துவமனையும் முக்கியமான ஒன்று தான். கோவில் உண்டியலில் காசு போடுவதை விட அதற்கு உதவுங்கள் என்று அந்த விழாவில் பேசியிருந்தார். இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி கண்டனங்கள் வலுத்துவருகிறது. ஜோதிகாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. 

புதுமுக இயக்குநரான ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்த இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், இப்படி செய்தால் இனி சூர்யா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் சம்மந்தப்பட்ட எந்த படங்களையும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்க பொதுச்செயலாளரும், சென்னை ரோகினி தியேட்டர் உரிமையாளருமான பன்னீர்செல்வம் பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தங்களது மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். “வருஷத்து 2,3 என்று ரிலீஸ் ஆகும் பெரிய படங்களை மட்டுமே நம்பி தியேட்டர்கள் இல்லை. ஆண்டு முழுவதும் வெளியாகும் சிறிய படங்களே எங்களது நம்பிக்கை. இந்த காலத்தில் தியேட்டர் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கான லாபம் அல்ல, ஓடீடீ, சேட்டிலைட் ரைட்ஸ், டப்பிங் அண்ட் ரீமேக் என ஏகப்பட்ட வகையில் லாபம் பார்க்கிறார்கள்”

தமிழகம் முழுவதும் உள்ள 1500 தியேட்டர்களின் நம்பி 25 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். சூர்யாவின் ஒரு குடும்பம் பொழைங்கிறதுக்காக, இவ்வளவு குடும்பங்களை நடுரோட்டுக்கு கொண்டு வர தயாராகிவிட்டார்கள்... ஒரு குடும்பம் வாழ்வதற்காக, இந்த 25 ஆயிரம் பேரின் குடும்பங்கள் அழியனுமா? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!