“இதை செய்தால் மட்டுமே தமிழ் சினிமா தழைக்க முடியும்”... நடிகர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அதிரடி கோரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 19, 2020, 11:07 AM IST
Highlights

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?

கொரோனா நெருக்கடிக்கு பிறகு தற்போது தான் தமிழ் திரையுலகில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த படங்கள் மட்டுமே வேலையை ஆரம்பித்த நிலையில், தற்போது ஒவ்வொரு படமாக தங்களது பணிகளை தொடங்க ஆரம்பித்துள்ளனர். நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் என பலரும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள்

என் இனிய சொந்தங்களே. வணக்கம்

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பார்கள், அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும் எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணி செய்யுங்கள், திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும் கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். 

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டி பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளர் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும் தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது தயாரிப்பாளர்களின் இந்த கடினமான சூழ்நிலையை உணர்ந்து ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்து கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். அவர்களை பாராட்டும் இந்த தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா? தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படத்துறையில் அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பகலைஞர்களும் தாமே முன் வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டு கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். 

இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா? எல்லாம் கேட்கவில்லை. ரூபாய் பத்து இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்த பட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் சதவீதத்தை (30%) விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்து தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன். 

இதையும் படிங்க: அட அமலா பாலா இது?... நடுக்காட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...!

இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவக் கேட்டுக் கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும் தயாரிப்பாளர்களையும் வாழவைப்போம்.
 

click me!