’வடசென்னை படத்தில் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தவர் சிம்புதான். ஆனால் அதிர்ஷ்டம் என்பக்கம் இருந்ததால் அப்படம் மறுபடியும் என்னைத்தேடி வந்தது’ என்று நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் சிம்புவை வம்புக்கு இழுத்திருக்கிறார் தனுஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, கிஷோர், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்திருக்கும் ‘வடசென்னை’ படம் வரும் 17ம் தேதி ரிலீஸாகிறது. தணிக்கைக் குழுவினரால் ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சுமார் இரண்டு காலத்தயாரிப்பில் இருந்த இப்படம் குறித்த நினைவுகள் சிலவற்றை இன்று பகிர்ந்துகொண்ட தனுஷ், ‘ நானும் வெற்றி சாரும் ‘பொல்லாதவனில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே இந்தக் கதையை என்னிடம் சொன்னார். ஆனால் பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்பதால் பின்னர் செய்துகொள்ளலாம் என்று எனது ஆர்வத்தை அடக்கிவைத்தார்.
பின்னர் 2014-ல் வட சென்னையை சிம்புவை வைத்து இயக்கப் போவதாக எனக்கு போன் செய்து சொன்னார். நானும் காரணம் எதுவும் கேட்காமல் போனைத்துண்டித்துவிட்டேன். ஒரு அருமையான படம் நம் கையை விட்டுப் போகிறதே என்கிற ஆதங்கத்தில் நான் இருந்தபோது, இதில் ஒரு கெஸ்ட் ரோல் இருக்கிறது நடிக்கிறாயா என்று கேட்டார். நானும் சாதாரண மனிதன் தானே, நான் ஹீரோவாக நடிக்கவேண்டிய படத்தில் கெஸ்ட் ரோல் அதுவும் சிம்புவுடன். சற்றும் யோசிக்காமல் அவர் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று உடனே மறுத்துவிட்டேன்.
பின்னர் என்ன நடந்ததோ சிம்புவிடமிருந்து தப்பி படம் மறுபடியும் என்னைத்தேடி வந்தது. நடுவில் நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டு கப்பென பிடித்துக்கொண்டுவிட்டேன். இந்தப் படம் மறுபடியும் எனக்குக் கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்பதை ரெடியான படத்தை இப்போது பார்த்து உணர்கிறேன்’ என்கிறார் தனுஷ் உற்சாகமாக.
படத்தை பறிகொடுத்த சிம்புவின் கருத்தை பட ரிலீஸுக்கு அடுத்த நாள் எதிர்பார்க்கலாம்.