சினிமா துறையில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தற்போது பிரபல பாடலாசிரியை ஒருவரும் செக்ஸ் புகார் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பாலியல் கொடுமைகளை. அவர்கள் அண்மைக் காலமாக தைரியமாக வெளியில் சொல்லத் தொடங்கியுள்ளனர். Me Too என்ற அமைப்பின் வலைதளங்களில் நடிகைகள், பிரபலமான பெண்கள், அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் என பலர் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான கொடுமைகளை பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இந்தி, தெலுங்கு, கன்னட நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து Me too மூலம் வெளிப்படையாக பேசி வருகின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டில் அதிக அளவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் சிக்குகின்றனர்.
முக்கியமாக கடந்த இரண்டு மாதங்களாக நடிகை ஸ்ரீரெட்டி , தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் எப்படி தங்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என ஆதாரத்துடன் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதையடுத்து பாலியல் தொல்லைகளை எதிர்த்து மகளிர் அமைப்புகள் போராட்டங்களில் இறங்கி உள்ளன. நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய அமைப்புகளையும் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி, பெல்லு சூப்புலு உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள பிரபல பாடலாசிரியை சிரேஷ்டா, தயாரிப்பாளர் ஒருவர் மீது செக்ஸ் புகார் தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
திரையுலகில் நடிகைகளை மட்டுமன்றி பிற பணிகளில் ஈடுபடும் பெண்களை கூட படுக்கைக்கு அழைத்து தொந்தரவு செய்யும் வழக்கம் தொடர்ந்து இருக்கிறது என சிரேஷ்டா தெரிவித்துள்ளார்.
ஒரு பிரபல தயாரிப்பாளரின் மனைவி என்னிடம் வந்து அவரது கணவரின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சினிமா துறையில் இருக்கும் சிலர் என்னிடம் வெறும் எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு தெலுங்கு பட உலகில் உனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முடியாது என்று அறிவுரை கூறினார்கள் என பாடலாசிரியை சிரேஷ்டா புகார் தெரிவித்துள்ளார்