தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையான சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை புரட்டி எடுக்கும் கொரோனா 2வது அலைக்கு திரையுலகினரும் தப்பவில்லை. கடந்த முறையைப் போலவே நடிகர், நடிகைகள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் உச்சகட்டமாக கடந்த 30ம் தேதி பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் கொரோனா தொற்று,க்கு மரணமடைந்தார். 4 நாட்களாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து மே 6ம் தேதி தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பாண்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அதே நாளில் ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடித்த கோமகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இன்று தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகரான ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையான சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில் நடித்த சுனைனா, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அதிக எச்சரிக்கையுடன் இருந்தும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின் படி தகுந்த விதிமுறைகளைப் பின்பர்ரி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன்.
என் குடும்பத்தினர் தவிர யாருடனும் நான் தொடர்பில் இல்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர். எனது சமூக வலைதளப் பக்கங்களை மொத்தமாக ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும், தேவை இருப்பவர்களுக்கு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ உதவியாக இருக்கும் விஷயங்களைப் பகிரும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள். நான் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று சுனைனா இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.