Suriya: விடாது கருப்பாய் துரத்தும் ‘ஜெய் பீம்’ விவகாரம்... மன நிம்மதியை தேடி வெளிநாடு சென்ற சூர்யா

By manimegalai aFirst Published Nov 23, 2021, 7:58 PM IST
Highlights

ஜெய் பீம் பட விவகாரம் விடாது கருப்பாக துரத்தி வருவதால் நடிகர் சூர்யா கடும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் தீபாவளியையொட்டி ஓடிடியில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. இப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பாமக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் அந்த சர்ச்சைக்குரிய காட்சி மாற்றப்பட்ட நிலையிலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. 

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஜெய் பீம் படக்குழு மீது கடும் அதிருப்தி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். 

இதேபோல் வன்னியர் சங்கமும் ஜெய் பீம் படக்குழு ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என வலியுறுத்தி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியதோடு, 'ஜெய்பீம்' திரைப்படத்தை எந்த ஒரு மத்திய, மாநில அரசுகளின் விருதுகளுக்கும் பரிந்துரைக்க கூடாது என கூறி இருந்தது. இவ்வாறு இந்த விவகாரத்தை பாமக-வினர் தொடர்ந்து பூதாகரமாக்கி வருகின்றனர்.

இன்றுகூட வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா, ஜோதிகா உள்பட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் பரபரப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு ஜெய் பீம் விவகாரம் விடாது கருப்பாக துரத்தி வருவதால் நடிகர் சூர்யா கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம். 

இதனைப் போக்க அவர் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளாராம். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளார்களாம். அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, மன நிம்மதி அடைந்த பின்னரே அவர் இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது.

click me!