உலகில் திவாலாகும் வங்கிகள்; என்னவாகும் இந்திய வங்கிகளின் நிலைமை? அமெரிக்காவின் எதிர்காலம் என்ன?

By Dhanalakshmi GFirst Published Mar 24, 2023, 10:13 PM IST
Highlights

அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஜப்பான் என பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளின் வங்கிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் இரண்டு பெரிய வங்கிகளின் திவாலுக்குப் பின்னர் பல்வேறு வங்கிகளின் நிதி நிலை அறிக்கையும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இது மட்டுமில்லை கடந்த 2022 ஆம் ஆண்டில் கிரிப்டோ நாணய வர்த்தகமும் பெரிய அளவில் அடி வாங்கியது. அதாவது இந்த வர்த்தகம் சுமார் 2 மில்லியன் டாலர் வரை இழப்பை சந்தித்தது. அமெரிக்க வங்கிகளின் திவாலுக்கு காரணம் அந்த நாட்டின் மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்தது. அரசின் கடன் பத்திரங்களை வாங்கி வங்கிகள் பாதிக்கப்பட்டன. இந்த கடன் பத்திரங்களின் மதிப்பு குறைந்தது. இந்த வங்கிகளில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் முதலீடுகள் திரும்பப் பெற்றனர். இதனால், வங்கி திவால் ஆனது. 

இதைத் தொடர்ந்து அமெரிக்க பங்கு வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், அல்பாபெட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 4.6 டிரில்லியன் டாலர் அளவிற்கு சந்தை மதிப்பை இழப்பை சந்தித்துள்ளன.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் பிரிட்டனின் அரசு கடன் பத்திரங்களின் இழப்பு 500 பில்லியன் டாலராக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவின் பாதிப்பு என்று இல்லாமல், 30 சதவீதம் வளர்ந்து வரும் நாடுகளும், 60 சதவீதம் குறைந்த வருமானம் இருக்கும் நாடுகளும் பெரிய அளவில் கடனில் சிக்கித் தவிக்கின்றன. மார்ச் 2023ல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் வங்கிகள் சுமார் 460 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துவிட்ட நிலையில், சிக்கல்கள் இப்போது நிதிய அமைப்புகளின் கதவுகளை தட்டியுள்ளன. 

வண்ண மீன் வளர்ப்பில் ஆர்வமா? ரூ.20 ஆயிரம் முதல் ரூ.4.8 லட்சம் வரை உதவித்தொகை வழங்குகிறது மத்திய அரசு

திவாலான சிலிக்கான் வேலி வங்கியின் சரிவு, குறுகிய கால வைப்புத் தொகையுடன் நீண்ட கால கடன் பத்திரங்களின் பங்குகளுக்கு அளிக்கும் வட்டி விகித அபாயத்தை காட்டுவதாக இருந்தது. மேலும், சிலிக்கன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கியில் 90 சதவீதத்திற்கும் மேலான வைப்புத்தொகைகளில் மூன்றில் இரண்டு பங்குகள் காப்பீடு செய்யப்படாதவை. இது நிதி நிலைமை மோசமாக இருக்கும்போது, பணப்புழக்கத்திற்கு அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அமெரிக்காவில் மட்டுமில்லை. ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்தில் இருக்கும் மிகப்பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் வங்கியும் திவாலாகி இருக்கிறது. இந்த வங்கியின் பங்குகள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வேகமாக சரிந்தது. இந்த வங்கி ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக கருதப்படுகிறது. அமெரிக்க வங்கிகளுக்கு முன்பே இந்த வங்கியில் நிதி சிக்கல்கள் உருவாகிவிட்டது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கிகள் திவாலுக்குப் பின்னர் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்குகள் பெரிய அளவில் சரிந்தன.  

கடந்த பிப்ரவரி மாதம், 2023, இந்த வங்கி ஆண்டு இழப்பாக 7.9 பில்லியன் டாலரைக் காட்டி இருந்தது. இது 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. நடப்பாண்டின் துவக்கத்திலேயே இந்த வங்கியின் பங்குகள் சுமார் 25 சதவீதம் குறையத் தொடங்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 90 சதவீத வீழ்ச்சியை இந்த வங்கி சந்தித்துள்ளது. இந்த வங்கியின் முக்கிய வாடிக்கையாளர்கள் 133 பில்லியன் டாலர் அளவிற்கான தங்களது முதலீட்டை 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் வாபஸ் பெற்றனர். 

வங்கித் துறையில் அதிகரித்து வரும் அழுத்தம் அடுத்த 12 மாதங்களுக்குள் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு ஆண்டுக்குள் மந்தநிலைக்குள் நுழைவதற்கு 35% வாய்ப்பு இருப்பதாக நம்புகிறது. வங்கிகள் திவால் ஆவதற்கு முன்பு இது 25% ஆக இருந்தது.

Explained: வீட்டில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம்? மீறினால் என்ன ஆகும்? முழு விவரம்

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவும் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான கோவிட் லாக்டவுனில் இருந்த காரணத்தால் பொருளாதார நெருக்கடிக்கு சென்றது. நாட்டில் பணப்புழக்கத்தை குறைக்கும் முயற்சியில் கடன் வழங்குபவர்களின் பண இருப்பை  கட்டுப்படுத்தும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. ஒரு பக்கம் வங்கிகள் திவாலாகி கொண்டு இருந்தாலும், மறுபக்கம் வட்டி விகிதங்களை வங்கிகள் அதிகரித்து வருகின்றன.  

சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கியின் சரிவு இந்திய வங்கித் துறையை பாதிக்க வாய்ப்பில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்திய வங்கிகள் போதிய மூலதனத்துடன் மிகப்பெரிய சொத்துக்களைக் கொண்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஏற்பட்ட நெருக்கடியால் இந்திய வங்கித் துறை பாதிக்கப்படவில்லை. அதேபோன்று இப்போதும் எந்த பாதிப்பும் வராது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய வங்கிகளும் போதுமான அளவு முதலீட்டைக் கொண்டுள்ளன'' என்று மணிகன்ட்ரோல் டாட் காமிற்கு கொடுத்த பேட்டியில் முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

click me!