Twitter Elon Musk: ட்விட்டர் நிறுவனம் திவாலாகிவிடும்! ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

By Pothy RajFirst Published Nov 11, 2022, 9:23 AM IST
Highlights

ட்விட்டர் நிறுவனம் அதிகமாக வருமானம் ஈட்டாவிட்டால், செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால் திவாலாகிவிடும் என்று ஊழியர்களிடம் முதல்முறையாக பேசியபோது உரிமையாளர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்தார்.

ட்விட்டர் நிறுவனம் அதிகமாக வருமானம் ஈட்டாவிட்டால், செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால் திவாலாகிவிடும் என்று ஊழியர்களிடம் முதல்முறையாக பேசியபோது உரிமையாளர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்தார்.

ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார். 

மிரட்டல்! எச்சரிக்கை! ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் முதல் மெயில்

மூத்த நிர்வாகிகள் பலரை வேலையிலிருந்து நீக்கினார், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ட்விட்டரில் பணியாற்றிய 50 சதவீதம் ஊழியர்களின் வேலையைப் பறித்தார். இதனால் அடுத்து என்ன செய்யப் போகிறார் எலான் மஸ்க் என்ற பதற்றத்தில் ட்விட்டர் ஊழியர்கள் உள்ளனர்.

இதற்கிடையே ட்விட்டர் ஊழியர்களுக்கு முதல்முறையாக எலான் மஸ்க் மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். அதில், “ ஊழியர்களிடம் இனிமையான வார்த்தைகளைப் பேசும் காலம் கடந்துவிட்டது. ட்விட்டர் நிறுவனத்துக்கு 80 லட்சம் சந்தாதாரர்கள் உடனடியாகத் தேவை. 

வாரத்துக்கு 80 மணிநேரம் பணியாற்ற வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றிய காலம் முடிந்துவிட்டது. அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அது ஏற்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

பேஸ்புக் மெட்டாவின் ஆட் குறைப்பு இந்தியாவிலும் பாதிப்பு ! உண்மை விவரங்கள் என்ன?

எலான் மஸ்கிடம் இருந்து வந்த முதல் கடிதமே பீதியே கிளப்பும் வகையில் இருந்தது கண்டு ட்விட்டர் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே ட்விட்டர் ஊழியர்களிடம் காணொலி வாயிலாக எலான் மஸ்க் நேற்றுப் பேசியுள்ளார் என்று ப்ளூம்பெர்க் செய்திகள் தெரிவிக்கின்றன.

எலான் மஸ்க், முதல்முறையாக ட்விட்டர் ஊழியர்களிடம் பேசும் போதும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில்தான் பேசினார் என்று ப்ளூம்பெர்க் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல், ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான யோல் ரோத், ராபின் வீலர் ஆகிய இருவரும், எலான் மஸ்க்கிடம் விளம்பரதாரர்கள் குறித்த கவலயைத் தெரிவித்துவிட்டு தங்கள்  பதவியை ராஜினாமா செய்துவிட்டனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லியா கிஸ்னரும் ட்விட்டரிலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார். தலைமை அந்தரங்க அதிகாரி டேமியன் கியாரன், தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி மரியானே போகார்டி ஆகியோரும் பதவியிலிருந்து விலகிவிட்டதாக ட்விட்டர் தகவல்கள் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது: டெஸ்லா பங்குகளையும் விற்றார்

அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் “ ட்விட்டர் நிறுவனத்தின் அந்தரங்க, கட்டுப்பாட்டு அதிகாரிகள் 3 பேர் விலகிவிட்டது  ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. இந்த அதிகாரிகள் இல்லாமல் ட்விட்டர் செயல்படுவது ஆழ்ந்த கவலையை அளிக்கும், விதிமுறைகளை மீறுவதுபோலாகும்” என எச்சரித்துள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களிடம் பேசுகையில் “ ட்விட்டர் நிறுவனம் அடுத்த ஆண்டு கோடிக்கணக்கான டாலர் வருமானத்தை இழக்கப்போகிறது. ட்விட்டர் நிறுவனத்துக்கு அதிகமான வருமானம் வர வேண்டும், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ட்விட்டர் நிறுவனம் திவாலாகுவதை தவிர்க்க முடியாது

. ட்விட்டர் நிறுவனத்துக்கு 1300 கோடி டாலர் கடன் இருக்கிறது. ஆதலால் ஊழியர்கள் கடினமாகப் பணியாற்ற வேண்டும். வாரத்துக்கு 80 மணிநேரம் பணிபுரிய வேண்டும், ஊழியர்களுக்கு சலுகையாக இலவச உணவு மட்டும் வழங்கப்படும். வீட்டிலிருந்து பணிபுரிவது தடை செய்யப்படும் அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வர வேண்டும். வர இயலாதவர்கள் பதவியிலிருந்து விலகலாம். உடனடியாக 80 லட்சம் சந்தாதாரர்களை நாம் உருவாகக் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!