பணமதிப்பிழப்பு(Demonetisation)! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?

By Pothy RajFirst Published Nov 8, 2022, 12:44 PM IST
Highlights

நாட்டில் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா, அதன் முழுமையான உண்மை என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.

நாட்டில் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா, அதன் முழுமையான உண்மை என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.

நோக்கம் என்ன

கறுப்புப் பணத்தை ஒழிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும், தீவிரவாத்தை ஒழிக்கும், ரொக்கப்பணத்தை நம்பிக்கையிருக்கும் சூழல் குறையும் என்றெல்லாம் மத்தியஅரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்தநோக்கம் நிறைவேறியதா என்பதுதான் மக்கள் வைக்கும் கேள்வியாக இருக்கிறது

விளைவுகள் தெரியவில்லை

கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி, இரவு 8 மணிக்கு அந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பின் பின்விளைவுகள் பலருக்கும் அப்போது தெரியவில்லை. 

தொடக்கத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டிய பல்வேறு பிரபலங்களும், நாட்கள் செல்லச் செல்ல மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும், சிரமங்களையும் பார்த்து பின்வாங்கினர், தாங்கள் பேசிய வார்த்தைக்கு மன்னிப்புக் கோரினார்கள்.

சொல்ல முடியா துன்பம்

மக்கள் தாங்கள் வங்கியில் சேமித்த பணத்தை அவசரச் செலவுக்கும், திருமணத்துக்கும், மருத்துவச் செலவுக்கும் எடுக்க முடியாமல் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகினர். சொந்த பணத்தை எடுக்கவே ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது. தினசரி ஏடிஎம்களில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என்ற நிலை வந்தது.

மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரிசையில் நிற்போடு மட்டுமல்லாமல் வங்கியின் ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் பணம் எடுக்க மணிக்கணக்கில் வெயிலில் காத்துக்கிடந்தனர். வெயிலில் நீண்டநேரம் காத்திருந்து உயிரிழந்தவர்களும் இருந்தனர். ஆனால்,எதுவுமே அரசின் அதிகாரப்பூர்வ கணக்கில் சேரவில்லை.

யாருக்கும் தெரியாது

ஆனால், மத்திய அரசோ தீவிரவாதிகள் கையில் பணப்புழக்கம் குறைந்துவிட்டது, தீவிரவாதம் குறைந்துவிட்டது, கள்ளநோட்டு புழக்கம் குறைந்துவிட்டது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது என்று விளக்கம் அளித்தது. ஆனால், எதைச் சொல்லி பணமதிப்பிழப்பு செயல்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியதா என்பது வெளிப்படையாக யாருக்கும் தெரியாது.

ஆர்பிஐ புள்ளிவிவரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புளளிவிவரத்தில் அக்டோபர் 21ம் தேதி நிலவரப்படி ரூ.30.88லட்சம் கோடி மக்களிடம் பணம் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

இது பணிமதிப்பிழப்பு கொண்டுவரப்படுவதற்கு முன் 2016, நவம்பர் 4ம் தேதி இருந்த அளவைவிட 71.84 சதவீதம் அதிகமாகும். அப்போது ரூ.17.70 லட்சம் கோடிக்கு பணப்பரிவர்த்தனை நடந்திருந்தது. அதைவிடதற்போது அதிகமாகும். அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து 6 ஆண்டுகள் கடந்தும் ரொக்கப்பணப்பரிமாற்றம் அதிகமாகவே இருக்கிறது.

எஸ்பிஐ வங்கி வெளியிட்ட கரன்சி சுழற்ச்சியின் பங்கு(சிஐசி) அறிக்கையில் “ 2015-16ம் ஆண்டு 88 சதவீதமாக இருந்த கரன்சி புழக்கம், 2021-22ம் ஆண்டில் 20 சதவீதம் குறைந்துள்ளது, இது 2026-27ம் ஆண்டில் மேலும் 11.15 சதவீதம் குறையும் எனத் தெரிவித்துள்ளது. அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரிக்கும், 2026-27ம் ஆண்டில் 88 சதவீதமாக டிஜிட்டல் பரிவர்த்தனை உயரும் எனத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ட்விட்டரில் பணமதிப்பிழப்பு குறித்து கூறுகையில் “ கறுப்புப் பணத்திலிருந்து நாட்டை விடுவிப்போம் எனக் கூறி பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது. ஆனால், வர்த்தகத்தையும், வேலைவாய்ப்பையும் பணமதிப்பிழப்பு அழித்தது. கடந்த 6 ஆண்டுகளுக்குப்பின்பும், மக்களிடத்தில் 2016ம் ஆண்டில் இருந்ததைவிட ரொக்கப்பணப் புழக்கம் 72 சதவீதம் அதிகமாகவே இருகிக்கிறது. பணமதிப்பிழப்பு தோல்வி என்றும், பொருளாதார சரிவுக்கு காரணம் என்பது  பற்றி பிரதமர் மோடி ஒப்புக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

வியப்பு இல்லை

மசாசூசெட்டஸ் ஆம்ஹெரெஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் கூறுகையில் “ பணமதிப்பிழப்பின் நோக்கம் ஏதும் நிறைவேறவில்லை. கருப்புப் பணத்துக்கு காரணம் பணம் என்ற பணமதிப்பிழப்பு  நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள தர்க்கம், 85 சதவீத மக்கள் அமைப்பு சாரா பொருளாதாரத்தில் ரொக்கப்பணத்தை நம்பியே உள்ளனர் என்பதை அறியாமல் செயல்படுத்தியது, அதை வடிவமைத்தது, அரசு அலுவலகங்கள், வங்கிகளை தயார்படுத்தாமல் செயல்படுத்தியது அனைத்துமே குறைபாடு உடையவைதான். ஆதலால் இது தோல்வி அடைந்தது என்பதில் வியப்பேதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்

 லோக்கல்சர்க்கில் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கறுப்புப்பணப் பொருளாதாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து  6 ஆண்டுகள் ஆகியும் அதன் நோக்கம், இலக்குகள் அடைந்துவிட்டதா என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளது

கறுப்பு பணம் குறைந்ததா

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்தபின்பும் ரியல்எஸ்டேட் துறையில் இன்னும் கறுப்புப்பணம் புழங்குகிறது, அதை மக்களும் ஏற்கிறார்கள். மக்கள் இன்னும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள், ஹார்டுவோர் ஆகியவற்றை வாங்குவதும், விற்பதும் இன்னும் முறையான பில் இல்லாமல்தான் நடக்கிறது. அப்படியிருக்கும் போது கறுப்புப்பணம் எவ்வாறு அழிந்துவிடும். 

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 31ம்தேதி நிலவரப்படி ரூ.500, ரூ.2000 நோட்டுகள் மதிப்பு 83.40 சதவீதம் இருந்தது, இது 2021, மார்ச் 31ம் தேதி 85.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நோக்கம் நிறைவேறியதா

ஆகவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழிந்ததா, தீவிரவாதிகள் கைகளில் பணப்புழக்கம் ஒழிந்துவிட்டதா, கள்ளநோட்டுகள் பிடிபடுவது குறைந்துவிட்டதா, மக்கள் ரொக்கப்பணத்தை பயன்படுத்தும் அளவு குறைந்துவிட்டதா,  ஏன் இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டது, நோக்கம் என்ன,  என்ற கேள்விகளுக்கு 6 ஆண்டுகள் ஆகியும் உண்மையான பதில் இல்லை. 

click me!