
தேசியப் பங்குச்சந்தையில்(என்எஸ்இ) நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது சிபிஐ அடுத்த 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோ-லொகேஷன் ஊழல்
என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
அபராதம்
இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.
நீதிமன்றக் காவல்
கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
ஏற்கெனவே சித்ரா ராம கிருஷ்ணா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனந்த் சுப்பிரமணியன் இருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
ஜாமீன் மனு
இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ சித்ராவிடம் இனிமேல் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏதும் சிபிஐக்குஇல்லை. ஆதலால் அவரைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலி்ல வைக்க அவசியம் இல்லை.நீதிமன்றம் ஜாமீன் அளித்து என்னவிதமான விதிமுறைகளை வகுக்கிறதோ அதைப் பின்பற்றத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏப்ரல் 8ம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.