
22காரட் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 10ரூபாயும், சவரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,680க்கும், சவரண் ரூ.37,440க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 சரிந்து, ரூ4,670 ஆகவும், சவரணுக்கு ரூ.80 சரிந்து ரூ.37,360க்கும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4670ஆக விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்று மீண்டும் சரிந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் கிராமுக்கு, ரூ92 வரை குறைந்தது, சவரனுக்கு ரூ.732 குறைந்தது.
கடந்த இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு, 19 ரூபாயும், சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ரூ.38ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை திடீரென ரூ37ஆயிரத்துக்கு குறைந்தது. ஏறக்குறைய ரூ.1056 சவரனுக்கு குறைந்தது.
தங்கம் விலை குறைய காரணம் என்ன
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி ஏற்கெனவே வட்டிவீதத்தை உயர்த்திவிட்டது. இதனால், டாலரின் மதிப்பு வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் கரன்ஸிக்கு எதிராக வலுவடைந்தது.
இ்ந்நிலையில் 13ம்தேதி அமெரிக்க பெடரல் வங்கி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில், கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, டாலர் மதிப்பு வலுப்பெறும், பல்வேறு நாட்டு கரன்ஸிகளின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும்.
இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட டாலரில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, அதிகமான வட்டி கிடைக்கும் என நம்பி அதில் கவனத்தை திருப்புகிறார்கள்.
டாலர் மதிப்பு அதிகமாக இருப்பதால், பல நாடுகளும் இறக்குமதியைக் குறைத்துள்ளது. குறிப்பாக தங்கம் இறக்குமதியைக் குறைத்துள்ளனர். இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்து விலையும் வரும் நாட்களில் மேலும் குறையத்தொடங்கும்.
டாலர் மதிப்புதான் வலுப்பெறும்போது தங்கம் வாங்க அதிகமான டாலர்களை கொடுத்து தங்கம் வாங்க வேண்டியதிருக்கும். இதனால், தங்கத்தின் மீதான முதலீடு குறையும், தங்கத்தின் மதிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், பெடரல் வங்கியின் வட்டி குறித்த இந்த வார அறிவிப்பு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும், விலை மேலும் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதன் காரணமாகவே கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.700க்கு மேலும், அதற்கு முந்தைய வாரம் ரூ.1000க்கு மேலும் குறைந்திருந்தது. தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தக் காரணியும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
வெள்ளி விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசு குறைந்து, ரூ.62.50க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.500 அதிகரித்து, ரூ.62,500க்கு விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.