மோசமான இந்த முடிவு வேண்டவே வேண்டாம்..!! அமெரிக்காவை கெஞ்சும் டெட்ரோஸ் அதானோம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2020, 2:24 PM IST
Highlights

அமெரிக்கா பல தசாப்தங்களாக உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சேவையாற்றி வந்துள்ளது, முழுஉலகமும் அதன் மூலம் பயன் அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என்றும், உலக சுகாதார அமைப்பு அதற்கு ஆதரவாக செயல்படுவதால் அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்ததுடன், அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியையும் முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் உலக சுகாதார அமைப்புடனான உறவை, அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வரக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். பல நாடுகளில் கொரோனா  தீவிரமாக பரவிவரும் நிலையில், அமெரிக்கா தங்கள் அமைப்புக்கான நிதியை நிறுத்த கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது,  சுமார் 180 க்கும் அதிகமான நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குத் தெரியாத இந்த சிறிய வைரசால், உலக வல்லரசான அமெரிக்காவே நிலைகுலைந்து போயுள்ளது.

அதன் ஒட்டுமொத்த பொருளாதாரமும், வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. கொரோனா வைரசையும் அதன் பரவலையும் தடுக்க முடியாமல் அமெரிக்கா திணறிவரும் நிலையில், அதன் ஒட்டுமொத்த கோபமும் சீனா மீது திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம், சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகிறது.  நோய்த்தொற்று பரவல் குறித்து சீனா உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா புகார் கூறி வரும் நிலையில்,  அதற்கு மறுப்பு தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ்  விலங்குகளின் மூலம் பரவியதாக கூறியது. இதனையடுத்து WHO சீனாவிற்கு ஆதரவாக நடந்து கொள்வதாகக் கூறி அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது.  இந்நிலையில்  அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில்,  உலகச் சுகாதார நிறுவனம் சுதந்திரமாக செயல்படுவதை நிரூபித்துக்காட்ட வேண்டும்,  விரைவில் தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதனுடனான உறவை துண்டிக்க நேரிடும் என எச்சரித்திருந்தார். 

அதேபோல் சீனாவின் கைப்பாவையாக அந்த அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகச் சுகாதார நிறுவனம் சீனாவின் பிடியில் உள்ளதாக கூறி, அந்த நிறுவனத்துடனான உறவை  துண்டித்துக்கொள்வதாக அறிவித்தார்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின்  இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், அமெரிக்காவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில்,  அமெரிக்கா WHOவுடன்  இணைந்து செயல்பட்டால் அதில் ஏராளமான மக்கள் பயனடைவர், அமெரிக்கா பல தசாப்தங்களாக உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சேவையாற்றி வந்துள்ளது, முழுஉலகமும் அதன் மூலம் பயன் அடைந்துள்ளது. தற்போது கொரோனா வைரசால் உலக நாடுகள் நெருக்கடியான சூழலை சந்தித்து வரும் நிலையில், அமெரிக்கா WHO  உடனான உறவை முடிவுக்குக் கொண்டு வரக்கூடாது என விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!