கொரோனா வைரசின் ஆட்டம் ஓவர்..?? ஆராய்ச்சியாளர்கள் அதிரடி கண்டுபிடிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2020, 1:27 PM IST
Highlights

மேலும் இந்தக் கூற்றுக்கு விஞ்ஞான அடிப்படையோ அல்லது மரபு ரீதியான அடிப்படையோ இல்லை என்று ஸ்காட்லாந்தின் எம்ஆர்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஸ்கார் மெக்லீன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் உலகளவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த மூன்று மாத காலத்தில் கொரோனா வைரஸ் பலவீனமடைந்திருப்பதாக இத்தாலி நாட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த 2 மாதங்களில் அதன் பரவல் வெகுவாக குறைந்துள்ளது எனவும்,  அந்த வைரஸ் அழிவை நோக்கி செல்கிறது என்பதையே இது உணர்த்துவதாகவும் இத்தாலி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது, உலக அளவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டியுள்ளது, இதுவரை சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

பல சர்வதேச நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இத்தாலியின் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜங்கரிலோ, இத்தாலியில் கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சை வழங்கும் அளவிற்கு இல்லை,  ஸ்வாப் பரிசோதனையின் மூலம் கடந்த 10 நாட்களில் கண்டறியப்பட்ட வைரஸை, கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு  இருந்ததுடன் ஒப்பிடும்போது, அதன் வீரியம் கணிசமாக குறைந்துள்ளது என்றும், இதனால்  இத்தாலியில் இரண்டாவது அலை தாக்குதலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வைரஸ் குறித்து தேவையில்லாத அச்சங்களை பரப்புவோர்களிடம் இருந்துதான் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறிய ஜங்கரிலோ, மெர்ஸ் மற்றும் சார்ஷ் வைரஸ்கள் தாங்களாகவே முடிவுக்கு வந்ததையும் சுட்டிக்காட்டினார்.  இந்த கருத்தால் இத்தாலியில் ஒரு புதிய விவாதமே  தொடங்கியுள்ளது. ஆல்பர்டோ ஜங்கரிலோ கூற்றை நிராகரித்த மற்றொரு மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் குறித்து இத்தாலி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞான அமைப்பின் தலைவரின் கருத்து அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர். 

மேலும் இந்தக் கூற்றுக்கு விஞ்ஞான அடிப்படையோ அல்லது மரபு ரீதியான அடிப்படையோ இல்லை என்று ஸ்காட்லாந்தின் எம்ஆர்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஸ்கார் மெக்லீன் தெரிவித்துள்ளார். ஸ்வாப் பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே வைரஸ் பலவீனமடைந்துள்ளது என்று முடிவு செய்வது தவறானது என்றும், அதேநேரத்தில்  பிறழ்வுகளிலிருந்து வைரஸ் பலவீனம் அடைவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றும், ஆனால் அதை கூறுவதற்கு முன்பு ஒரு ஆழமான ஆய்வு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜாங்கெரில்லோவின் கூற்றை நிராகரித்த சுகாதார அமைப்பு, வைரஸ் திடீரென பலவீனமடைந்துவிட்டதாக நம்பிக்கை பரவக்கூடாது என்றும் கூறியுள்ளது. இத்தாலியில் புதிதாக யாருக்கும் கொரோனா பரவவில்லை என்பதும், இறப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதில் சந்தேகம் ஏதுமில்லை, இதனால் தான் நாட்டில் லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் பொருள் வைரஸ் பலவீனமடைந்துவிட்டது என்பதல்ல, சமூகவியல் போன்ற பல காரணங்கள் உள்ளன. இதற்கிடையில் வைரஸ்  பலவீனமாகிவிட்டது என்னும் கூற்றை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் இத்தாலி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

உடல்ரீதியான சமூக இடைவெளியை பராமரிப்பது, கூட்டமாக கூடுவதை தவிர்ப்பது, அடிக்கடி கை கழுவுவவது, மற்றும் முகக் கவசம் அணிவது போன்றவை நோய்த்தொற்றை குறைக்கும் என்று இத்தாலி அரசு கூறியுள்ளது. இந்த விவாதங்களுக்கு மத்தியில் சுமார் 200 நோயாளிகளின் அறிகுறிகளை ஆராய்ந்த பின்னர் வைரஸ் மிகவும் பலவீனமாகி விட்டது என்று சான் ரஃபேல் மருத்துவமனை உறுதியாக தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜி ஆய்வகத்தின் இயக்குனர் மாசிமோ கிளெமென்ட் இதை கூறியுள்ளார். ஜெனீவாவில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் மருத்துவர் பாசெட்டி சான்,  ரஃபேல் மருத்துவமனையின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது வைரஸின் சக்தி பலவீனம் அடைந்திருப்பதாகவும், தற்போதுள்ள கோவிட்-19 முன்பு இருந்ததை விட வித்தியாசமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 

click me!