எப்போதும் இந்தியாவின் நண்பன் நாங்கள்தான்..!! இந்திய-சீன விவகாரத்தில் களமிறங்கிய ரஷ்யா..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2020, 5:30 PM IST
Highlights

1991-92 முதல் ஒரு தனி தேசமாகவும், சோவியத் யூனியனாகவும் ரஷ்யா பல தசாப்தங்களாக இந்தியாவின் உற்ற நண்பனாகவும், முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் சப்ளையராகவும்  இருந்து வருகிறது என அவர் நினைவுகூர்ந்தார்.

இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் ரஷ்யாவை கவலைகொள்ள செய்வதாக அந்நாடு கருத்து தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லை விவகாரத்தில், நீண்ட மௌனம் காத்துவந்த ரஷ்யா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ரஷ்ய துணைத்தூதர் (டி.சி.எம்) ரோமன் பாபுஷ்கின் உண்மையில் இருநாட்டு எல்லையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம், இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம்  பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான எல்லைப்பகுதியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. எல்லை பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், காஷ்மீர் மற்றும் லடாக் எல்லையில்,  இருநாட்டு படைகளும் ஆயுதங்களை குவிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இருநாட்டின் ராணுவமும் பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை வடக்கு லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகில் தங்களது பகுதியில் குவித்து வருகின்றன. இதனால் எல்லையில் அசாதாரன சூழல்  ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக தூதரக  ரீதியில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இதேபோல் இந்திய தரப்பும் பிரச்சனையை அமைதியாக தீர்க்க முயற்சித்து வருவதாக கூறியுள்ளது. ஆனால் இருநாடுகளும் எல்லையில் தொடர்ந்து குவித்துவருவதாகவும் இதுவரை தலா 5 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  சீனா ஒரு முடிவுக்கு வரும்வரை இந்திய ராணுவம் பின்வாங்காது என இந்திய பாதுகாப்புத் துறை உறுதியாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்தியாவின் பரஸ்பர நட்புநாடான ரஷ்ய துணைத்தூதர் ரோமன் பாபுஷ்கின், 

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். எங்களுக்கு தெரிந்த வரை இருநாடுகளும் பரஸ்பரம் பிரச்சினையை பேசி தீர்க்க தயாராக உள்ளன. மேலும் அதற்கான வழிகளும் ஆராயப்பட்டு வருகிறது என நாங்கள் நம்புகிறோம், இது தொடர்பான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஊக்குவிப்போம், 1991-92 முதல் ஒரு தனி தேசமாகவும், சோவியத் யூனியனாகவும் ரஷ்யா பல தசாப்தங்களாக இந்தியாவின் உற்ற நண்பனாகவும், முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் சப்ளையராகவும்  இருந்து வருகிறது என அவர் நினைவுகூர்ந்தார். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியாவுக்கு இடையேயான உறவு வளர்ந்துவரும் நிலையில் ரஷ்யா உடனான உறவு  மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் ரஷ்யாவுடன் வலுவான உறவைப் பேணுவதற்கு இந்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மாஸ்கோ எப்போதும் இந்தியாவுக்கு நெருங்கிய நண்பனாகவே உள்ளது. அதேபோல் ரஷ்யா, சீனாவுடனும் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. இந்தியா கடந்த வாரம் தனது பாதுகாப்பு மற்றும் தேசிய இறையாண்மையை உறுதி செய்வதற்காக எல்லைகளில் தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக கூறியது, ஆனால் எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு ராஜதந்திரம் மற்றும் இராணுவ மட்டத்தில் சீன தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

click me!