இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே; பதட்டத்தில் கொழும்பு!!

By Dhanalakshmi GFirst Published Jul 13, 2022, 12:26 PM IST
Highlights

இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையிலும் போராட்டம் வலுத்து வருவதால் அவசர நிலையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று அறிவித்தார். அந்த நாட்டின் இடைக்கால அதிபராகவும் ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையிலும் போராட்டம் வலுத்து வருவதால் அவசர நிலையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று அறிவித்தார். இலங்கையின் அதிகாரபூர்வ இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தேர்வு செய்து பார்லிமென்ட் சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரணில் ராஜினாமா செய்யக் கோரி போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டக்காரார்கள் கொழும்புவில் இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அலுவலத்திற்குள் புகுந்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் வலுத்து வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அலுவலகத்தின் முன்பு வலுக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். போலீசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகின்றனர். ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிக்கக் கூடாது என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாமல், கூடுதலாக அதிபர் பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கே பார்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதில் இருந்து வெளி வர முடியாமல், கடனையும் அடைக்க முடியாமல், வட்டியும் கட்ட முடியாமல் பணவீக்கம் அதிகரித்து, மக்கள் அன்றாட உணவுக்கும் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களிடம் இருந்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

பிரதமர் வீடு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த இடமே போர்க்களமாக அந்த காட்சி அளிக்கிறது. அவசர நிலை அறிவிப்பு செய்து தொடர்ந்து பதவியில் நீடிக்கவே ரணில் விரும்புகிறார் என்றும், அவர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்கா தப்பிச் செல்ல முயற்சித்த கோத்தபாய ராஜபக்சே… விசா வழங்க அமெரிக்கா மறுப்பு!!

மாலத்தீவு சென்று இருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அவரை மாலத்தீவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் அங்கும் போராட்டம் வெடித்துள்ளது.

துபாய் தப்பி ஓட முயற்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி மறுப்பு: கைது செய்யப்படுகிறாரா?

ரணில் மறுப்பு:

இன்று மதியம் ஒரு மணிக்குள் அதிபரும், பிரதமரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் இலங்கையில் இருந்து கோத்தபய மனைவியுடன் மாலத்தீவுக்கு நேற்று இரவே தப்பிச் சென்றார். கோத்தபய ராஜினாமா செய்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், ரணில் இன்னும் செய்யவில்லை.

கைதுக்கு ரணில் உத்தரவு:

மேற்கு இலங்கை மாகாணத்தில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்யுமாறு பிரதமர் ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அதிபரின் வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். இதற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவே கோத்தபய ராஜபக்சே வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதைத் தொடர்ந்துதான், ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து இருந்தனர். 

மீண்டும் போராட்டம்:

கொழும்புவில் இருக்கும் பிரதமர் அலுலகத்திற்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். கோத்தபய தப்பிச் சென்றுள்ளதாலும், ரணில் ராஜினாமா செய்ய மறுப்பதாலும் போராட்டக்காரர்கள் கொந்தளித்துள்ளனர். போராட்டம் உக்கிரமடைந்துள்ளது.

அதிபர் தேர்வு:

வரும் 20 ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் கூடி புதிய அதிபரை, பிரதமரை தேர்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை ரணில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால், அவரது பொறுப்புக்களை சபாநாயகர் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கோத்தபய ராஜபக்சே

click me!