எதிர்த்து பேசும் பத்திரிக்கையாளர்களுக்கு சமாதி..!! வெளிச்சத்திற்கு வந்தது இம்ரான் கான் அரசின் கொடூரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2020, 5:54 PM IST
Highlights

தொடர்ந்து பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு வன்முறையை ஏவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 11 ஊடகவியலாளர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு வன்முறையை ஏவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 11 ஊடகவியலாளர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதில் 7 பேர் இம்ரான் கான் ஆட்சிக்காலத்தில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசுக்கு எதிராக செய்தி வெளியிடுபவர்களை குறிவைத்து, அரசும் அரசுக்கு துணையாக ராணுவம் மற்றும் காவல் துறையும் பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் ஊடகவியலாளர்கள், ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் நாட்டின்  மனித  உரிமைக்கு குரல் எழுப்புவோர் அடக்கப்பட்டு வரகின்றனர்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பத்திரிக்கையாளர், ஜான் என்பவர் தனது குழந்தையை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக காரில் சென்றார், பின்னர் அவர் அதே காரில் கடத்தப்பட்டுள்ளார்,  பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் உடையை அணிந்திருந்தவர்கள் அவரை கடத்தியதாக கூறப்படுகிறது.

அவர் கடத்தப்பட்டதற்கு பின்னர் அவரது கார் பள்ளிக்கூட வாசலிலேயே விடப்பட்டது, அவரது தொலைபேசி மற்றும் கார் சாவியை காரிலேயே இருந்ததாகவும். உடனே தன் கணவர் காணாமல் போனது குறித்து அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது, அதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் பத்திரிக்கையாளர் ஜான், கடத்தப்பட்டதும் அதில் போலீசார் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் 12 மணி நேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானில் 11 ஊடகவியலாளர்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளனர். இம்ரான் கான்  ஆட்சிக்காலத்தில் மட்டும் 7 பேர் அந்தவகையில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் ராணுவம் ஒரு சமூக ஆர்வலரை தடுப்புக் காவலில் வைத்தது. பின்னர் அவரது வழக்கு ரகசிய நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்களை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் உலகிலேயே மிகவும் மலிவானவர்கள் என அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் உள்ளூர் ஊடகவியலாளர்கள், ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. செய்தியாளர்களை கட்டுக்குள் வைத்திருக்க எடிட்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதுதவிர மில்லியன் கணக்கான ரூபாய்களில் விளம்பர மசோதாக்களை காட்டி அரசாங்கம் ஊடகங்களை பணிய வைக்க முயற்சிக்கிறது. என அரசு மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டப்படுகிறது.  ஆம்னிஸ்டி இன்டர்நேஷ்னலின் தெற்காசியாவின் தலைவர் ஓமர் வாரிச் கூறுகையில் ஒருவரை கடத்துவதை ஆயுதமாக அரசு பயன்படுத்துகிறது. அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களை பயமுறுத்துவதற்கும் இவ்வாறு செய்யப்படுகிறது. அதேபோல் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் நேரடியாக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர், கடந்த ஆண்டு முக்கிய செய்தி நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகள் நிறுத்திவைக்கப்பட்டன. அதில் டஜன் கணக்கான ஊடகவியலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடும் மன அழுத்தம் மற்றும் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக பத்திரிக்கையாளர்கள் இப்போது சர்ச்சைக்குரிய தலைப்புகளை தவித்து வருகின்றனர். சமீபத்தில் தேசிய பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் ஜானும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசின் மிரட்டலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. 

click me!