கொரோனா வைரஸ் குணப்படுத்த முடியாமல் கூட போகலாம்...!! தடுப்பூசி ஆராய்ச்சி குறித்து WHO இயக்குனர் அதிர்ச்சி.!!

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2020, 3:47 PM IST
Highlights

ஆனாலும் அதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நாம் எட்டவில்லை. அதேவேளையில் ஒரு கட்டத்தில் இந்த வைரசுக்கு சிகிச்சை என்பது சாத்தியம் இல்லாமல் கூட போகலாம். 

கொரோனா வைரஸ் குணப்படுத்த முடியாமல் கூட போகலாம் எனவும், எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை நிச்சயம் அனைத்து நாடுளும் உறுதியாக பின்பற்ற வேண்டும் எனவும் உலக சுகாதாரத்துறை இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.   

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக தூரத்தை பராமரித்தல் மற்றும் முறையான சோதனை உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அனைத்து நாடுகளிடமும் உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக சுகாதார அவசர திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான் மற்றும் உலகச் சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை  சந்தித்த போது இவ்வாறு கூறியுள்ளனர். 

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  வைகமாக பரவியுள்ளது. இதுவரை 1.84 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 கோடியே 16 லட்சத்து 72 ஆயிரத்து 315 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 97 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா ரஷ்யா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் உள்ளன. அதேபோல் இன்னும் பல்வேறு நாடுகளில் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் உலகச் சுகாதார அவசர திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரியான் மற்றும் உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல்  டெட்ரோஸ் அதோனம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தெரிவித்த அதோனம், கரோனா வைரஸ் தடுப்பூசிகள் இப்போது மருத்துவ பரிசோதனைகளில் மூன்றாம் கட்டத்தில் உள்ளன. 

ஆனாலும் அதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நாம் எட்டவில்லை. அதேவேளையில் ஒரு கட்டத்தில் இந்த வைரசுக்கு சிகிச்சை என்பது சாத்தியம் இல்லாமல் கூட போகலாம். ஆகவே முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை  கடைப்பிடிப்பது, கை கழுவுதல் மற்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்துவது போன்ற சுகாதார நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில் தொற்றுநோய் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக தடுப்பூசி ஆராய்ச்சி குறித்து பேசிய மைக்கேல் ரியான் covid-19 க்கு எதிரான மருந்துகள் தயாரிப்பதிலும் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதிலும், சர்வதேச அளவில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம்தான் ஆனால் அதற்கு ஒரு பெரிய காரணம் உள்ளது. 130 கோடி என்ற மக்கள் தொகையே அதற்கு காரணம்.  என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!