#UnmaskingChina: தீரமிகு செயல்களால் நாட்டை காப்பாற்றிய ராணுவ வீரர்கள்..!! மெய்சிலிர்த்த மோடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 20, 2020, 6:47 PM IST
Highlights

இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இந்திய பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். 

இந்திய எல்லைக்குள் சீனா எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்றும், நமது இராணுவ வீரர்களின் தீரமிக்க செயல்களால் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்றும்   பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில்,  சீனா, இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகவும், அது பல இடங்களை கைப்பற்றியதாகவும் கூறப்பட்டு வந்தநிலையில், மோடி இவ்வாறு கூறியுள்ளார். கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி,  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது, அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்திய படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர். அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 35 சீனர்கள் கொள்ளப்பட்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பு நடந்ததை ஏற்றுக் கொண்ட சீனா, எத்தனைபேர் இறந்தனர் என்ற விவரத்தை வெளியிடவில்லை. 

இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இந்திய பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர்,  இந்தியாவுக்குள் சீனப் படைகள் ஊடுருவவில்லை, ஊடுருவ முயன்றவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர். நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும் என  கூறியுள்ளார். மேலும் சீனர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும், சீனாவில் அத்துமீறல் நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்பு படையினரின் வீரமிகு செயல்களால் முறியடிக்கப்பட்டுள்ளது, எந்தப் பகுதியும் சீனர்கள் கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். 
 

click me!