தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவு..?? கிம் ஜாங் உன் தங்கை அதிரடி...!!

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2020, 11:59 AM IST
Highlights

வடகொரியா, தென்கொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என காட்டமாக கிம் யோ ஜாங் சியோலைக் கண்டித்ததுடன் "தென் கொரியா அதிகாரத்தை உடைக்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்", விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுப்போம்

தென்கொரியாவுக்கு எதிராக நிச்சயம் வடகொரியா நடவடிக்கை எடுக்கும் என அதிபர் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரி கிம் யோ ஜாங் மிரட்டல் விடுத்துள்ளதாக, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். அதாவது தென்கொரிய தலைநகர் சியோல் உடனான அனைத்து தொடர்புகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகொரியா அறிவித்தது, வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் ஒரு சர்வாதிகாரி என சித்தரித்து, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வடகொரிய  எல்லையைத் தாண்டி துண்டுப்பிரசுரங்களை வீசினர், இந்த சம்பவத்தால் மிகுந்த கோபமடைந்த வடகொரியா, எல்லையில் அத்துமீறிய தங்கள் நாட்டு சமூக செயற்பாட்டாளர்களை தென்கொரியா ஒடுக்க வேண்டும், இல்லையென்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என எச்சரித்தது. அதே நேரத்தில், இருநாட்டு எல்லையில் கட்டப்பட்டுள்ள லைசான் அலுவலகமும் (தகவல் தொடர்பு அலுவலகம்) மூடப்படும் என வடகொரியா காட்டமாக கூறியது. 

இது குறித்து வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன்னின் சக்திவாய்ந்த தங்கை கிம்-யோ-ஜாங் வெளியிட்ட அறிக்கையில், 2018 ஆம் ஆண்டில், கிம்-ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் இடையேயான இராணுவ ஒப்பந்தத்தில் இரு நாட்டுக்கும் இடையே பரஸ்பர அமைதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தென்கொரியாவின் சமூக சேவையாளர்களும், வடகொரியாவின் பிரிவினைவாதிகளும் நீண்ட காலமாக வடகொரியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம், இவர்கள் வடகொரிய இறையாண்மை மற்றும் அணுசக்தி பற்றிய விவகாரங்களில் பைத்தியக்காரத்தனமாக செய்திகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர், எனவே அது போன்ற நபர்களை உடனே ஒடுக்க வேண்டும்.  "தென்கொரியா மீண்டும் மீண்டும் சாக்குப்போக்கு கூறி, வடகொரியாவுக்கு எதிரான நிலைமையைக் கட்டுப்படுத்தாவிட்டால்,  அதற்கு அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும்" என கண்டித்ததுடன், திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர், தென்கொரிய அதிகாரிகளின் நடத்தையால் வடகொரிய மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், பொறுப்பற்ற நபர்களை பொறுப்பற்ற முறையில் வடகொரியாவிற்குள் நுழைய தென்கொரிய அதிகாரிகள் அனுமதித்திருப்பது வடகொரியாவின் கவுரவத்தை பாதிக்கிறது. எனவே தென்கொரியாவுடன் பேச வேண்டாம் என வடகொரியா முடிவு செய்துள்ளதாக கிம்-யோ-ஜாங் அறிவித்தார். 

இந்த அறிக்கை வெளியான சில தினங்களில் மீண்டும் வடகொரிய சக்தி வாய்ந்த சகோதரி கிம்-யோ-ஜாங், தென்கொரியாவை எச்சரித்துள்ளதாக கே.சி.என்.ஏ செய்திநிறுவனம் செய்திவெளியிட்டுள்ளது. அதில் வடகொரியா, தென்கொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என காட்டமாக கிம் யோ ஜாங் சியோலைக் கண்டித்ததுடன் "தென் கொரியா அதிகாரத்தை உடைக்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்", விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுப்போம். உச்சநீதிமன்றம், எங்கள் கட்சி மற்றும் அரசு வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, அடுத்த கட்ட நடவடிக்கையாக தொன்கொரியாவுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்குமாறு ஆயுதத்துறை பொறுப்பாளருக்கு அறிவுறுத்துகிறேன் என யோ ஜாங் கூறியதாகவும், "எங்கள் இராணுவ வீரர்கள் எங்கள் எதிரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்வார்கள்" என்று அவர் மேலும் கூறியதாகவும் கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

click me!