இந்து மதத்தை தழுவிய முதல் இந்தோனேசியா அதிபர் மகள்… காரணம் இதுதான்…!!

By manimegalai aFirst Published Oct 27, 2021, 7:31 PM IST
Highlights

இஸ்லாமிய தேசமான இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகர்னோவின் மகள் இஸ்லாமியத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார். அத்தோடு தனது பெயரையும் அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.

இஸ்லாம் அமைப்பு, இஸ்லாம் குழுக்கள் என இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இஸ்லாமியர்களின் தேசமான இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகர்னோ. அவருக்கு 3 மனைவிகள் என கூறப்படுகிறது. அதில் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவர் தான் சுக்மாவதி என்னும் பெண். இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் எழுதிய கவிதை ”இந்தோனேசிய ஹேர் பன் முஸ்லிம்கள் வழக்கமாக அணியும் முழு முக முக்காட்டை விட அழகாக இருக்கிறது” என்பது தான். அவரின் இந்த கவிதை இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய பெண்களின் புனித உடையான முக்காட்டை இழிவுபடுத்தும் விதமாகவும் இருப்பதாக கூறி கடும் கண்டனங்கள் எழுந்தன. இஸ்லாமிய குழுக்கள் பல கோபம் கொண்டு சுக்மாவதிக்கு எதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

பின்னர் தனது கவிதைக்காக சுக்மாவதி பத்திரிகை ஒன்றில், 'இந்தோனேசியாவின் அனைத்து இஸ்லாமியர்களிடமும், குறிப்பாக கவிதையால் மனது புண்பட்டவர்களிடமும் என் மனதின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கண்ணீர் மல்க மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால் அதில் திருப்தியடையாத இந்தோனேசிய உலமா பாதுகாப்பு அணி (TPUI)  மற்றும் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (GMII) போன்ற கடுமையான இஸ்லாமிய குழுக்கள் அவரது மன்னிப்பை மறுத்து,  அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் சுக்மாவதி மனமுடைந்து போனார், இந்த நிலையில் அவர் இந்து மதத்திற்கு மாறப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படியே அவர் தனது 70வது பிறந்த நாளான நேற்று பாலியில் நடந்த மதம் மாறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இந்து மதத்திற்கு மாறியதோடு தனது பெயரை 'சுதி வதனி' என்றும் மாற்றிக்கொண்டார்.

பின்னர் பேசுகையில், இந்து மதம் பாலினீஸ் மக்களுக்கு நெருக்கமானதாக இருப்பதாக கூறியுள்ளார். சுக்மாவதி கஞ்ஜெங் குஸ்தியை திருமணம் செய்துகொண்ட சில ஆண்டுகளிலேயே அவருக்கு விவகாரத்து ஆகியுள்ளது. அதனை தொடர்ந்து அவர் தனது அரசியல் பயணத்தை இந்தோனேசிய தேசிய கட்சியிலிருந்து தொடங்கினார். ஆனால் அதிலும் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. இதனால் சுக்மாவதி கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்தே சுக்மாவதி இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.

click me!