196 நாடுகள்..! 21 ஆயிரத்தை நெருங்கும் உயிர்பலி..! கோர முகத்தை காட்டும் கொரோனா..!

By Manikandan S R SFirst Published Mar 26, 2020, 8:16 AM IST
Highlights

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.

உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,281 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது.  ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், அமெரிக்கா,பிரான்ஸ், இந்தியா என உலகின் 196 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனாவிற்கு பலி தொடர்ந்து அதிகரித்த நிலையில் தற்போது 7,503 உயிரிழந்து விட்டனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 3,445 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அங்கு 443 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் 2,077 பேரும் பிரான்சில் 1,331 பேரும் பலியாகி இருக்கின்றனர். உலகம் முழுவதும் 4,39,654 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,11,942 ஆக இருக்கிறது. இந்தியாவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்து 12 பேர் பலியாகி இருக்கின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் பெருத்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

click me!