சந்திரயான்-3 vs லூனா-25: நிலவின் தென்துருவத்தில் முதலில் தடம் பதிக்கப்போவது இந்தியாவா? ரஷ்யாவா?

By SG BalanFirst Published Aug 17, 2023, 2:52 PM IST
Highlights

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய பெருமையைப் பெற இந்தியாவின் சந்திரயான்-3, ரஷ்யாவின் லூனா-25 இரண்டும் போட்டியிடுகின்றன. லூனா-25 சந்திரயான்-3 யை முந்த வாய்ப்பு அதிகம்.

ரஷ்யா கடந்த 47 ஆண்டுகளில் முதல் முறையாக லூனா-25 என்ற விண்கலத்தை ஆகஸ்ட் 11ஆம் தேதி சோயுஸ் 2.1வி ராக்கெட்டில் சந்திரனுக்கு அனுப்பியுள்ளது. சந்திரனின் மேற்பரப்பின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கத்தை மேற்கொள்வதே இந்த விண்கலத்தின் குறிக்கோள் ஆகும். இதன் மூலம் ரஷ்யா நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெறவும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், இந்த மாதத்தில் இதே நோக்கத்துடன் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலமும் நிலவில் தரையிறங்க உள்ளது. இஸ்ரோவால் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3, ஆகஸ்ட் 23 அல்லது 24ஆம் தேதி தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

வெற்றிப்பயணத்தின் இறுதிக்கட்டத்தில் சந்திரயான் 3.. விக்ரம் லேண்டர் பிரியும் புகைப்படத்தை வெளியிட்ட ISRO!

முதலில் தரையிறங்குவது யார்?

சந்திரயான்-3 மற்றும் லூனா-25 இரண்டும் ஏறக்குறைய ஒரு மாத இடைவெளியில் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும் இரண்டுக்கும் ஒரே இலக்குதான். இரண்டு நாடுகளின் விண்கலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் விண்வெளி ஏஜென்சியான ரோஸ்கோஸ்மோஸ் அளிக்கும் தகவலின்படி, லூனா-25 விண்கலத்தின் லேண்டர் ஆகஸ்ட் 21 அன்று சந்திரனைத் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு தரையிறங்கும் தேதி ஆகஸ்ட் 23 எனக் கணித்திருந்த நிலையில், இரண்டு நாட்கள் முன்னதாகவே லூனா-25 சந்திரனில் தரையிரங்கும் எனக் கூறியது. மறுபுறம் சந்திரயான்-3 ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்கலத்தில் இருந்து சந்திரயான்-3 லேண்டர் இன்று பிரிகிறது; நிகழவிருக்கும் அற்புதம்!!

முக்கிய வேறுபாடு

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் மூலம் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா முதல் நிலவுப் பயணத்தை மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 11, 2023 அன்று அந்நாட்டின் வோஸ்டோச்னி விண்வெளி நிலையத்தில் இருந்து சோயுஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட்டில்  லூனா-25 விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்-3 பயணம், முந்தைய சந்திரயான்-2 பயணத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படுகிறது. எல்விஎம்-3 (LVM-3) ராக்கெட்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 நிலவுப் பயணத்தை ஆரம்பித்தது.

லூனா-25 ஐந்து நாள் சந்திரனை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு, அதைத் தொடர்ந்து 5-7 நாட்கள் சந்திரனின் சுற்றுப்பாதையில் பயணித்து நிலவில் தரையிறங்கும். ஆனால், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகிறது. சந்திரயான்-3 எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அதிக நாட்கள் பயணிப்பதாக இஸ்ரோ விளக்கியுள்ளது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் 14 புவி நாட்கள் அல்லது ஒரு நிலவு நாள் மட்டுமே ஆயுள் கொண்டிருக்கும். அதே நேரத்தில் லூனா-25 விண்கலம் சுமார் ஒரு வருடம் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும். சந்திரயான்-3 இல் விக்ரம் லேண்டர் (LM), பிரக்யான் ரோவர் மற்றும் ஒரு உந்துவிசை தொகுதி (PM) ஆகியவை உள்ளன. லூனா-25 விண்கலத்திலும் மென்மையான தரையிறக்கத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் உள்ளன.

இரண்டு விண்கலங்களும் தரை இறங்கும் இடம் வேறுவேறாக இருக்கும் என்பதால், எந்த அசம்பாவிதமும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-3 எடுத்த நிலவின் குளோஸ்-அப் தோற்றம்! இஸ்ரோ வெளியிட்ட பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்!

click me!