சீனாமீது கொழுந்துவிட்டெரியும் அமெரிக்காவின் கோபம்..!! உலக சுகாதார நிறுவனத்துக்கு ட்ரம்ப் ஆப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published May 30, 2020, 3:56 PM IST
Highlights

400 மில்லியன் டாலர் வழங்கும் அமெரிக்காவை விட 40 மில்லியன் டாலர் வழங்கும்  சீனாதான் முக்கியம் என உலகச் சுகாதார நிறுவனம் முடிவு செய்துவிட்டது. 

உலக சுகாதார அமைப்பு தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துவந்த நிலையில்,  அந்த  அமைப்புடனான உறவை துண்டித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் வேகமாக பரவி வருகிறது.  இதுவரையில் உலகளவில் 60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய இந்த வைரசால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் நிலைகுலைந்து போயுள்ளன. அங்கு மட்டும் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்த வைரசால் நிலை குலைந்து போயுள்ள உலக வல்லரசான அமெரிக்காவின் ஒட்டு மோத்த கோபமும் சீனா மீது திரும்பியுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுக்க ஏறபட்டுள்ள பேரழிவுக்கு சீனாதான்  காரணம் எனவும் , வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் இந்த வைரஸ் கசிந்தது எனவும்,  இந்த வைரஸ் பரவியபோதே இதை சீனாவால் கட்டுப்படுத்தி இருக்க முடியும்,  ஆனால் அது அப்படி செய்யவில்லை. என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது குற்றம் சாட்டி வருகிறார். 

அதுமட்டுமின்றி சீனா செய்த தவறுகளை உலக சுகாதார அமைப்பும் கண்டுகொள்ளவில்லை,  சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு அந்த அமைப்பு உலகை தவறாக வழிநடத்திவிட்டது,  வைரஸை முன்கூட்டியே அறிந்து உலகத்திற்கு எச்சரிக்க தவறிவிட்டது. என உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்புக்கு வழங்கிவந்த 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தினார்.  பல்வேறு நாடுகள் உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தியது குறித்து அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில்,  அமெரிக்கா  உலக சுகாதார அமைப்புக்கு சில நிபந்தனைகளை முன் வைத்தது.  அதாவது, உலக சுகாதார அமைப்பு தன்னுடைய நடவடிக்கைகளை மொத்தமாக மாற்றிக் கொள்ள வேண்டும்,  கொரோனா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச  விசாரணையை ஏற்றுக்கொள்ள சீனாவை நிர்பந்திக்க வேண்டும்,  என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளில் உலக சுகாதார நிறுவனம் ஈடுபடும் பட்சத்தில் நிதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருந்தார், அப்படி செய்யாவிட்டால் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் எச்சரித்திருந்தார். 

 

இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  உலக சுகாதார  நிறுவனத்துடனான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொள்வதாக அறிவித்தார். அப்போது பேசிய அவர், உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது,  பலமுறை அந்த  அமைப்பை எச்சரித்தும் அது தன்னை திருத்திக் கொள்ளவில்லை.  400 மில்லியன் டாலர் வழங்கும் அமெரிக்காவை விட 40 மில்லியன் டாலர் வழங்கும்  சீனாதான் முக்கியம் என உலகச் சுகாதார நிறுவனம் முடிவு செய்துவிட்டது. எனவே அந்நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை  நிரந்தரமாக நிறுத்துவதுடன் அந்த அமைப்புடனான உறவை நிரந்தரமாக துண்டித்துக் கொள்ள விரும்புகிறேன் என அவர் அறிவித்துள்ளார். மேலும்,  இதுவரை உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிவந்த நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

 

click me!