கொரோனாவால் ரூ 637 லட்சம் கோடி இழப்பு... சைலண்டாக கிளம்பும் பேராபத்துகள்... சிக்கலில் தவிக்கப்போகும் உலகம்..!

By Thiraviaraj RMFirst Published May 30, 2020, 10:49 AM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கணித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கணித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று சுமார் 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. இந்த வைரஸ் தொற்றால் 58 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக உலகமெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, பொருளாதாரத்தை உலுக்கி விட்டது. தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியதால் இதுவரை உலகம் காணாதவகையில் பொருளாதார பேரழிவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், நியூயார்க்கில் வளர்ச்சிக்கான நிதி உதவி குறித்த உயர் மட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், “உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒற்றுமையுடனும், ஒருங்கிணைந்தும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்போது இதை செய்யாவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று நோயானது, உலகம் முழுவதும் கற்பனை செய்ய முடியாத பேரழிவையும், துன்பத்தையும் ஏற்படுத்தி விடும். 6 கோடி மக்களை அது ஏற்கனவே வறுமையில் ஆழ்த்தி விட்டது. உலகின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சரி பாதியளவு, அதாவது 160 கோடிப்பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயானது உலகளவில் உற்பத்தியில் சுமார் ரூ.637 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தி விடும். இது 1930-களில் ஏற்பட்ட பெருமந்த நிலைக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை ஆகும்” என்று கூறினார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் ஆன்லைன் வழியில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், “உலகம் பெரும் பலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பலவீனமான சுகாதார அமைப்புகள், சிக்கலான பருவநிலை மாற்றம், சமத்துவமின்மை நிலவுகிறது. அணு ஆயுத பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது. சைபர் ஸ்பேஸ்சின் சட்டவிரோதம் வரை எல்லா இடங்களிலும் இந்த பலவீனத்தின் அறிகுறிகளை நாங்கள் பார்க்கிறோம். இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது புத்தியில்லாத ஆணவம். 

அமெரிக்காவும், சீனாவும் எங்கள் பணியில் பங்கேற்றன. ஆனால், தற்போது அந்த நாடுகள் வர்த்தகம், கொரோனா வைரஸ் தோற்றம், ஹாங்காங் விவகாரம் உள்ளிட்ட பலவிதமான பிரச்சினைகள் காரணமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் நமது பணிக்குழுவில் ஈடுபடுவார்கள். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு ஒரு அர்ப்பணிப்பு உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்”என்று அவர் கூறினார்.

click me!