20 ஆயிரம் பேர் துடிக்கத் துடிக்க கொலை...90 ஆயிரம் இளம் விதவைகள்... கொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2020, 5:45 PM IST
Highlights

இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.

இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே என இலங்கை அரசை நாம் தமிழர் கட்சி கண்டித்துள்ளது . இது தொடர்பாக  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  விடுத்துள்ள அறிக்கையின் விவரம் :-  இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.  கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக்கட்டப்போரில் காணாமல்போன தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக்கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின் அறிவிப்பு உலகத்தார் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது. 

இறுதிக்கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா. பெருமன்றம்வரை சென்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் போராடி வருகிற நிலையில், இதுகுறித்து வாய்திறக்காது கள்ளமௌனம் சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறை ஒப்புக்கொண்டிருக்கிறது. 

  ஈழ நிலத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டப்பெண்கள் கணவனை இழந்து நிற்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள் என எவ்விதப் பேதமுமில்லாது தமிழர்கள் சிங்கள அரசின் கொத்துக்குண்டுகளால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.  போர் விதிகளும், மரபுகளும் முற்று முழுதாகத் தகர்க்கப்பட்டு, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, இரண்டு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 

கடந்த சில வருடத்திற்கு முன்பாக, இலங்கைக்குச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனுக்கு முன்பாகக்கூடத் தமிழின சொந்தங்கள் காணாமல்போன தங்களது உறவுகளின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு கதறி அழுத சம்பவங்களும் நடந்தன. இச்சூழலில் அவர்கள் மொத்தமாக இறந்துவிட்டதாக அலட்சியப்போக்கோடு அறிவித்து அதனை மிக எளிதாகக் கடந்து செல்ல முற்படும் இலங்கை அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.  காணாமல் போன அத்தனையாயிரம் தமிழர்கள் எவ்வாறு இறந்தார்கள்? யாரால் இறந்தார்கள்? அவர்களது உடல்கள் எங்கே?, அவர்களது உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டதா? என்கிற கேள்விகளுக்குச் சிங்கள அதிபர் பதில்சொல்லியேஆகவேண்டும். 

ஆகவே, மத்திய அரசு தமிழர்களது உணர்வினையும், போராட்டத்தினையும் மதித்து இலங்கையுடனான உறவை முறித்துக்கொண்டு தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமெனவும், சிங்கள அரசு செய்தத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையைப் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த சர்வதேச அழுத்தம் தர வேண்டுமெனவும், பொது வாக்கெடுப்பை ஈழத்தமிழ்ச் சொந்தங்களிடம் நடத்தி தனித்தமிழீழம் அமைவதற்கான முன்னெடுப்பினை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், இந்தியக் குடிமகன் எனும் உணர்வே அற்றுப்போய்த் தீரா வன்மமும், ஆறா கோபமும் தமிழ் இளைய தலைமுறைப்பிள்ளைகளின் நெஞ்சிலே தங்கி அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!