DMK : ஜேசிபி மூலம் பூக்களை வீசிய திமுக இளைஞர் அணியினர்.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..

Apr 17, 2024, 12:16 AM IST

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்டார். உடுமலை இருந்து பரப்புரையை முடித்துவிட்டு பிரச்சார வாகனத்தில் பரப்புரை மேற்கொள்ளும் இடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வந்தபோது, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன் ஏற்பாட்டில் 6 ஜேசிபி இயந்திரங்களில் செண்டு மல்லி உள்ளிட்ட பூக்கள் நிரப்பப்பட்டு உயரத்தில் நின்ற இளைஞரணியினர் அவரது வாகனத்தை நோக்கி உதயநிதி மீது பூக்களை அள்ளி அள்ளி ஆர்வத கோளாறில் வீசினார்கள். கூட்டத்தில் வாகனம் ஊர்ந்து வந்ததால் பூக்கள் உதயநிதி மீது விழுந்து கொண்டே இருந்தது அவர், வேண்டாம் ! என கையேசைத்தும் கேட்காமல் பூக்களை வீசியதால் முகம் சுளித்தார்.

பின்னர் ஒரு வழியாக பரப்புரை மேற்கொள்ளும் இடத்துக்கு வந்த உதயநிதி பொதுமக்களிடையே பேசிய போது, “பொள்ளாச்சி எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர் நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டார். நான் நலமாக இருக்கிறேனா? இல்லையா? என நீங்கள் கேட்க மாட்டீர்களா? என பொதுமக்களை பார்த்து கேட்டார். பின்னர் எல்லா பகுதிகளும் பூக்களை தூவி வரவேற்பார்கள். ஆனால் பொள்ளாச்சியில் பூக்களால் அடித்து வரவேற்பு கொடுத்துள்ளீர்கள் என கிண்டலாக பேசினார். இதனால் திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. பிரம்மாண்ட வரவேற்பு என்ற பெயரில்  அவர் வேண்டாம் என்றும் சொல்லும் அளவிற்கு பூக்களை வீசுவதா? என கூட்டத்திறகு வந்த பொது மக்கள் முனுமுனுத்தனர்.