கோவை: நள்ளிரவு நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..!

Apr 29, 2024, 11:31 PM IST

கோவை காந்திபுரம் 7வது வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் மீனாட்சி. இவருக்கு விஷ்ணு மற்றும் குகன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மூவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.  காலை எழுந்து பார்த்தபோது மீனாட்சியின்  செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சியின் தொடர்பு எண்களுக்கு அவரது மகன்கள் அழைத்த போது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

பணம் மற்றும் நகைகள் எதுவும் காணாமல் போகாத நிலையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் நள்ளிரவு நேரத்தில் முகத்தை மறைத்தபடி வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், காம்பவுண்ட் சுவரில் குதித்து வீட்டின் உள்ளே புகுந்து 2 ஆண்ட்ராய்டு போன்களை மட்டும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற காட்சிகள் பதிவாக இருந்தன.  

சிசிடிவி காட்சி ஆவணங்களுடன்  மீனாட்சி மற்றும் அவரது மகன்கள் சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார் நள்ளிரவில் முகத்தை மறைத்தபடி வீட்டுக்குள் புகுந்து செல்போன்களை மட்டும் குறிவைத்து திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த  சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.