சங்கரய்யா உடலுக்கு கட்சியினர் பொதுமக்கள் அஞ்சலி!

Nov 15, 2023, 5:46 PM IST

சுதந்திர போராட்ட தியாகியும், முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா, நேற்று முன் தினம் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானார், அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசு மரியாதையுடன் சங்கரய்யாவுக்கு பிரியா விடை கொடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மருத்துவமனையில் காலமான சங்கரய்யாவின் உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சில மணி நேரம், குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள், கட்சியினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சங்கரய்யாவின் இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.