சாலையைக் கடந்த யானை கூட்டத்தை பார்த்து பரவசம் அடைந்த சுற்றுலா பயணிகள்

May 9, 2023, 1:26 PM IST

கோடை சீசன் தொடங்கி இருப்பதால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்தாயிரம் வாகனங்களில் வந்து சென்றுள்ளன. தற்போது கோடை மழை நன்றாக பெய்து பசுமை திரும்பி இருப்பதால் சாலையோரங்களில் மான்கள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது. 

மேலும் இதில் தெப்பக்காடு, மசனகுடி சாலையில் யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வனவிலங்குகளுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் தேவையில்லாத சத்தம் எழுப்பக் கூடாது எனவும் இதை மீறி நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.