டிராய் பெயரில் போலிச் செய்திகள்... விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

By SG BalanFirst Published Jan 4, 2024, 3:02 PM IST
Highlights

போலிச் செய்திகளுக்கு எதிராக பொதுமக்களை எச்சரிக்கும் வகையில், டிராய் ஏற்கெனவே தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) பெயரில் சைபர் கிரைமினல்களால் அனுப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து சந்தாதாரர்களுக்கு எச்சரிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"இப்போதெல்லாம், டிராய் பெயரில், பல செய்திகள் அனுப்பப்பட்டு பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்" என்று டிராய் செயலாளர் வி. ரகுநந்தன் கூறுகிறார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் எச்சரிக்கை செய்தியை அனுப்ப டிராய் அறிவுறுத்தி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த மூலையிலும் மொபைல் இன்டர்நெட் சேவை! 6 சாட்டிலைட்களை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!

டிராய் பெயரில் பரப்படும் பொய்ச் செய்திகள்:

சமீப காலமாக, மோசடி செய்பவர்கள் டிராய் என்ற பெயரில் மொபைல் சந்தாதாரர்களுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள். டவர் நிறுவலுக்கு தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற, மொபைல் இணைப்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்க்க, மொபைல் எண்ணை சரிபார்க்க  என்று பல காரணங்களைக் கூறி போலிச் செய்திகள் அனுப்பப்படுகின்றன.

இதுபோன்ற போலிச் செய்திகளுக்கு எதிராக பொதுமக்களை எச்சரிக்கும் வகையில், டிராய் ஏற்கெனவே தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

எச்சரிக்கை செய்தி:

டிராய் வழங்கியுள்ள அறிவுறுத்தலின்படி, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் BT-TRAIND என்ற தலைப்புடன் சந்தாதாரர்களுக்கு ஒரு SMS  அனுப்ப வேண்டும். BT-TRAIND என்ப்பது இந்தியா முழுவதும் டிராய் பயன்படுத்தும் அடையாளச் சொல் ஆகும்.

"டிராய் ஒருபோதும் எந்த செய்தியையும் அனுப்புவதில்லை. மொபைல் எண்களைச் சரிபார்ப்பது / துண்டிப்பது / சட்டவிரோதமான செயல்களுக்காக எந்த அழைப்பும் செய்யாது. டிராய் என்ற பெயரில் வரும் இத்தகைய போலிச் செய்திகள் / அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சந்தேகம் எழுந்தால் மோசடி மற்றும் தேசிய சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கப்படலாம்" என்ற எச்சரிக்கைச் செய்தியை அனைவருக்கும் அனுப்ப டிராய் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்தியாவில் சுமார் 115 கோடி மொபைல் சந்தாதாரர்கள் உள்ளனர். ரிலையன்ஸ் ஜியோ 45 கோடி, பார்தி ஏர்டெல் 38 கோடி, வோடபோன் ஐடியா 22 கோடி மற்றும் பிஎஸ்என்எல் 9.5 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ஜனவரி 1 முதல் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கைச் செய்திகளைப் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விர்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 'அவதார்கள்'

click me!