மும்பை நிறுவனத்துடன் தீவிர பேச்சுவார்த்தை... மீண்டும் இந்தியா வரும் டிக்டாக்?

By Kevin KaarkiFirst Published Jun 1, 2022, 5:43 PM IST
Highlights

இந்திய சந்தையில் ரி எண்ட்ரி கொடுப்பதற்காக பைட் டான்ஸ் நிறுவனம் ஹிராந்தானி குழுமத்துடன் கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

டிக்டாக் செயலியை வைத்து இருக்கும் பைட்-டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2020 வாக்கில் இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிக்டாக் செயலியை மத்திய அரசு தடை செய்தது. 

இந்த நிலையில், முன்னமி வீடியோ பிளாட்பார்ம் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி டிக்டாக் முன்னாள் ஊழியர்கள் மற்றும் புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் ரி எண்ட்ரி கொடுப்பதற்காக பைட் டான்ஸ் நிறுவனம் ஹிராந்தானி குழுமத்துடன் கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரூ. 3 ஆயிரத்து 500 கோடி முதலீடு:

யோட்டா இன்ஃப்ரா-ஸ்டிரக்ச்சர் சொல்யுஷன்ஸ் சார்பில் டேட்டா செண்டர் நடத்தி வரும் மும்பையை சேர்ந்த நிறுவனம் தான் ஹிராந்தானி குழுமம். சமீபத்தில் இந்த நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த சேவையான டெஸ் பிளாட்ப்ராம்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருந்தது. மேலும் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிகளை புது வியாபாரங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இரு நிறுவனங்கள் இடையேயான பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. இது பற்றிய திட்டங்கள் மத்திய அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. “அவர்கள் எங்களிடம் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் திட்டங்கள் பற்றி எங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனுமதி கோரி எங்களிடம் அவர்கள் வரும் பட்சத்தில், அவர்களின் கோரிக்கை பற்றி விசாரணை செய்வோம்,” என மூத்த அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார். 

அரசியல் பிரச்சினை:

இந்தியா மற்றும் சீனா இடையே அரசியல் ரீதியாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில், டிகாட்க் மற்றும் இதர சீன செயலிகள் இந்தியாவில் மீண்டும் அனுமதிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய பயனர்களுடன் மீண்டும் இணைவது பற்றி நம்பிக்கை உள்ளதாக டிக்டாக் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். டிக்டாக் இந்திய ரி எண்ட்ரி குறித்து பைட் டேன்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

click me!