Latest Videos

படிச்சது 10வது தான்... டம்மி ஐ.டி. கம்பெனியை தொடங்கி லட்ச லட்சமாக அபேஸ் செய்த ஆசாமிகள்!

By SG BalanFirst Published Jun 30, 2024, 6:28 PM IST
Highlights

உய்கேவுடன் வீடியோ காலில் பேசிய மோசடி ஆசாமிகள் அவரது மொபைலில் உள்ள செட்டிங்ஸை தங்களுக்கு வசதியாக மாற்ற வைத்துள்ளனர். பிறகு இனிமேல் உங்க மொபைலில் எந்த பிரச்சினையும் இருக்காது, சுமூகமாகச் செயல்படத் தொடங்கும் என்று கூறியுள்ளனர். உய்கே அவர்கள் சொன்னதை வெகுளித்தனமாக நம்பிவிட்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்த மூன்று இளைஞர்கள் போலியான ஐடி நிறுவனத்தை நிறுவி, நாக்பூரில் வசிக்கும் ஒருவரை ஏமாற்றி ரூ.5 லட்சம் அபேஸ் செய்துள்ளனர். இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மூவரையும் மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பால்கரில் உள்ள விரார் பகுதியைச் சேர்ந்த அதுல் இந்திரபதி சிங் (32), நாலசோபரைச் சேர்ந்த நீரஜ் ஷாம்குமார் சௌபே (26), மற்றும் தஹிசரைச் சேர்ந்த விகாஸ் மேக்லால் சா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று நாக்பூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூன்று பேரும் சமீபத்தில் சமர்த் ஐடி சொல்யூஷன்ஸ் என்ற டம்மியான நிறுவனத்தை உருவாக்கி கூகுளில் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதற்கான விவரங்களைப் பட்டியலிட்டனர். நாக்பூரில் உள்ள மஹால் பகுதியில் வசிக்கும் அதுல் உய்கே இந்த டம்மி கம்பெனியை உருவாக்கிய கேடிகளிடம் வசமாகச் சிக்கியுள்ளார்.

சென்ற மே மாதம் உய்கேவின் மொபைலில் PhonePe செயலியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்போது, கூகுளில் கஸ்டமர் கேர் எண்ணைத் தேடியுளாளர். அபோபது சமர்த் ஐடி சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் இருந்த எண்ணைக் கண்டுபிடித்து, வீடியோ கால் செய்துள்ளார்.

உய்கேவுடன் வீடியோ காலில் பேசிய மோசடி ஆசாமிகள் அவரது மொபைலில் உள்ள செட்டிங்ஸை தங்களுக்கு வசதியாக மாற்ற வைத்துள்ளனர். பிறகு இனிமேல் உங்க மொபைலில் எந்த பிரச்சினையும் இருக்காது, சுமூகமாகச் செயல்படத் தொடங்கும் என்று கூறியுள்ளனர். உய்கே அவர்கள் சொன்னதை வெகுளித்தனமாக நம்பிவிட்டார்.

அடுத்த இரண்டு நாட்களில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.49 லட்சம், ரூ.1.99 லட்சம் மற்றும் ரூ.1.49 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் திருடப்பட்டுள்ளது. அப்போதுதான் உய்கேவுக்கு தான் ஏமாந்துபோனது புரிந்திருக்கிறது. உடனே சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், மோசடி செய்த 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!