94 கடன் வழங்கும் செயலிகள் உட்பட 232 செயலிகள் முடக்கம்!

By Asianet TamilFirst Published Feb 6, 2023, 2:52 PM IST
Highlights

அவசரநிலை அடிப்படையில் சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள், 94 கடன் வழங்கும் செயலிகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு சில குறிப்பிட்ட செயலிகளை முடக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்,  சீனாவுடன் தொடர்பில் இருந்த 138 பந்தய செயலிகளையும், 94 கடன் வழங்கும் செயலிளையும் முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆறு மாதங்களாக இந்த செயலிகளை ஆய்வு செய்து, அவை இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும், வேவு பார்க்கும் தன்மை கொண்ட செயலிகளாக இருப்பதையும் கண்டறிந்தது. இந்த செயலிகள் தவறான வழியில் மக்களை திருப்பவதாகவும், தனிநபர்களை கடனில் சிக்கவைப்பதாகவும் கருதப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த செயலிகளில் உள்ள சர்வர் தரப்பில் பாதுகாப்பு விதிமீறல்கள், வெகுஜன மக்களை உளவு பார்த்து, அவர்களது டேட்டாக்களை எடுக்கும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தெலுங்கானா, ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளால் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. 

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இந்த செயலிகள் மூலம் கடன் வாங்கியவர்கள் அல்லது பந்தய ஆப்ஸ் மூலம் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டதன் பின்னர் இந்த விவகாரத்தில் அரசு மிகதீவிரமாக எடுத்து கொண்டது. 

இந்த ஆப்ஸ்களில் பெரும்பாலானவை சீன நாட்டவர்களால் உருவாக்கப்பட்டு, இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களை நிறுவனத்தில் இயக்குநர்கள் பதவிக்கும் வைத்து உருவாக்கப்பட்டது. மேலும், தனிநபர்களிடம் கடன் வழங்குவதாக கவர்ந்திழுத்து, பின்னர் வட்டி விகிதங்களை ஆண்டுக்கு 3,000% வரை உயர்த்தியது. கடனாளிகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதபோது, அவர்களை அச்சுறுத்தி, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி தற்கொலைக்கும் தூண்டியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்த செயலிகளைத் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது. "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமானதாக" இருப்பதால், ஐடி சட்டத்தின் பிரிவு 69 விதியை மீறுகிறது என்பதை உறுதிப்படுத்திய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

5 ஆண்டுகளுக்கு முன்பு Netflix பதிவிட்ட ட்வீட் இப்போது வைரல்! காரணம் என்ன?

சில பயன்பாடுகள் ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்றாலும், அவை இன்னும் பிற இணையதளங்கள், மாற்றுவழிகள் மூலம் இன்ஸ்டால் செய்யப்படலாம். மேலும் சில கிரிப்டோகரன்சியை கட்டண முறையாக வைத்துள்ளன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது. இதேபோல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, கேபிள் டிவி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டம் 1995 மற்றும் ஐடி விதிகள் 2021 ஆகியவற்றின் கீழ் இந்த நடவடிக்கைகளுக்கான விளம்பரங்களும் சட்டவிரோதமானது என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தய செயலிகள், சூதாட்ட செயலிகளானது பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக-பொருளாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது. இந்திய மக்களை குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று ஆன்லைன் இடைத்தரகர்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 

click me!