M2 சிப்செட் உடன் மேக்புக் ஏர் - சத்தமின்றி புது ஸ்கெட்ச் போடும் ஆப்பிள்!

By Kevin KaarkiFirst Published Mar 12, 2022, 4:21 PM IST
Highlights

ஆப்பிள் நிறுவனம் M2 சிப் கொண்ட மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் மேம்பட்ட மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய மேக்புக் மாடல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இது ஏராளமான நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

M2 பிராசஸர் A15 பயோனிக் சிப்செட் மீது உருவாக்கப்பட்டு இருக்கும். இதில் முந்தைய பிராசஸர்களில் இருந்ததை போன்றே 8-கோர் CPU-க்கள் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன் 10-கோர் GPU வழங்கப்படுகிறது. அதிக GPU வழங்கப்படுவதால், புதிய பிராசஸர் முந்தைய சிப்செட்டை விட அதிவேகமாக செயலாற்றும் என எதிர்பார்க்கலாம். எனினும், இவை M1 மேக்ஸ் அல்லது M1 அல்ட்ரா சிப்செட்கள் அளவுக்கு செயல்திறனை வழங்காது.

புதிய மேக்புக் ஏர் மாடல் J413 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. இது ஒற்றை M2 சிப்செட் அம்சத்துடன் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய சிப்செட் தவிர அடுத்த தலைமுறை மேக்புக் ஏர் மாடல் முந்தைய மாடலை போன்ற அம்சங்களையே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

மேக்புக் ஏர் மாடல் மட்டுமின்றி 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலிலும் M2 சிப் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் J493 குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. இந்த லேப்டாப் முந்தைய மாடலை போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் எனகூறப்படுகிறது. 

இந்த லேப்டாப் மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் மே அல்லது ஜூன் மாத வாக்கில் நடைபெற இருக்கும் 2022 WWDC நிகழ்வில் இந்த லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் வரும் மாதங்களில் வெளியாகலாம்.

tags
click me!