
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் காட்டுத்தனமாக வெட்டி இளைஞரை மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. இரு விரல்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. மர்ம கும்பலை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அரசுக்குச் சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் தைலமர காடுகள் உள்ளன. கிழக்குப் பகுதி, மேற்கு பகுதி என இரண்டு பகுதிகளாக இந்த தைலமரக்காட்டுப் பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தலா ஒரு வனவர் வனத்துறை சார்பில் நியமிக்கப்பட்டு, காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றுப் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலையில் மேற்கு பகுதி வனவர் செந்தில்மணி தைலமரக்காட்டு பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அந்த பகுதியில் உடலில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் ஒரு இளைஞர் இறந்து கிடந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வனவர் செந்தில்மணி.
பின்னர் இதுகுறித்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே, திருக்கோகர்ணம் காவலாளார்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இறந்து கிடந்த இளைஞருக்கு 30 வயது இருக்கலாம் என்பதும், அவரது உடலில் வெட்டு காயங்கள் இருந்ததால் அவர் மர்ம கும்பலால் காட்டுத்தனாமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
பின்னர், காவலாளர்கள் அந்த இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் பாலகுரு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் ரோஸ் நிற சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். மேலும் அவரது தலையில் மூன்று இடங்களில் வெட்டுக்காயங்களும், தோள் பட்டையில் வெட்டுக்காயமும், மேலும் அவரது இரண்டு விரல்களும் துண்டிக்கப்பட்டு இருந்தன.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மார்சல் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கொலை செய்யப்பட்ட இளைஞர் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி பாலன்நகர் வரை ஓடிச் சென்று நின்றது.
பின்னர், சம்பவ இடத்துக்கு தடயவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அப்போது பிணத்தின் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அந்த செல்போனை கைப்பற்றி காவலாளர்கள் விசாரித்தனர்.
அந்த விசாரணையில் வெட்டி கொலை செய்யப்பட்டவர் மதுரை மாவட்டம் பறவை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கனகராஜ் (26) என்பது தெரிந்தது.
ஆனால், கனகராஜ் எப்படி இங்கு வந்தார் என்று தெரியவில்லை. அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து கனகராஜை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வனப்பகுதியில் கனகராஜ் வெட்டி கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தாரும் சோகத்தில் உள்ளனர்.