
நாமக்கல்
நாமக்கல்லில் மரம் வெட்டும் தொழிலாளி காட்டுத்தனமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலைக்கு இப்போது பழி வாங்கப்பட்டதா? என்று கோணத்தில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், தாதம்பட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி (50). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் நாமக்கல் காவேட்டிப்பட்டியில் வசித்து வந்தார். இவருடைய மகன் சுரேஷ் (26).
நேற்று மாலை நாமக்கல் குறவர்காலனி பகுதியில் நல்லுசாமி, உறவினர்கள் குமார், அவரது நண்பர் குட்டி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சாராயம் குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் குமார் மற்றும் குட்டி ஆகிய இருவரும், உதவிக்கு அவர்களது நண்பர்கள் ஆறு பேரை அழைத்துள்ளனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர், குமார் மற்றும் குட்டி ஆகிய எட்டு பேரும் சேர்ந்து குடிபோதையில் இருந்த நல்லுசாமியை தூக்கி, மோட்டார் சைக்கிளில் வைத்து நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள லாரி பட்டறை ஒன்றுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் நல்லுசாமியை காட்டுத்தனமாக வெட்டியுள்ளனர். இதில் நல்லுசாமி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சுரேஷ், நாமக்கல் நல்லிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில், துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த நல்லுசாமியின் உடலை பார்வையிட்டு உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அவரது மகன் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கொலை சம்பவம் குறித்து நாமக்கல் காவலாளர்கள் வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளர்களின் முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நல்லுசாமி 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்றிருப்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது.
எனவே, அந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கில் நல்லுசாமி படுகொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் காவலாளர்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும்ம் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.