
விருதுநகர்
விருதுநகரில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெண்கள் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டிகொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக நூறு நாள் வேலை திட்டத்தில் பணி கொடுக்கப்படாததால் அதனைக் கண்டித்தும், மீண்டும் வேலை வழங்கக் கோரியும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், "அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைதிட்டம் செயல்படுத்தப்படாமல் அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளார்கள். மனு கொடுக்க ஏற்பாடு செய்தாலும் அதனை ஊராட்சி செயலாளர் தடுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பூங்கோதை, மாவட்ட குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.