வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு  பெண்கள் போராட்டம்...

First Published Apr 13, 2018, 10:18 AM IST
Highlights
Women siege and protest in Regional Development Office


திருவள்ளூர்
 
திருவள்ளூரில், தேசிய ஊரக வேலை வழங்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த  தேர்வழி  ஊராட்சிக்கு உட்பட்டது தேர்வழி, தேர்வழி காலனி, பிரித்வி நகர் மற்றும் நேதாஜி நகர்  பகுதிகள். 

இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 260  பயனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக தேசிய ஊரக வேலை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது இந்த வேலை முறையாக வழங்கப்படவில்லை. மேலும், சிலருக்கு வேலை செய்ததற்கான சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த 120 பெண்கள் நேற்று  கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி,  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளுக்கான பராமரிப்பு வேலை தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. தேவைக்கு ஏற்ப புதிதாக முன்னுரிமை அடிப்படையில் வேலைகள் ஏதாவது வரும்போது முறையாக தகவல் தெரிவித்து வேலை வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்டு முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு ஒன்றை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவியிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

click me!