பிரபல நடிகைக்கு ஆதரவாக விஜய், கமல் ஏன் குரல் கொடுக்கவில்லை?

By Manikanda PrabuFirst Published Feb 21, 2024, 6:46 PM IST
Highlights

கூவத்தூர் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல நடிகைக்கு ஆதரவாக அரசியலில் இருக்கும் நடிகர்கள் விஜய், கமல்ஹாசன் ஆகியோர் குரல் கொடுக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 10 நாட்களுக்கு கூவத்தூர் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் நிர்வாகி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளது. சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, அண்மையில் அக்க்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், பிரபல நடிகை ஒருவரது பெயரையும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமிதான் பணம் கொடுத்தாதாகவும் அவர் தெரிவித்தார்.

Latest Videos

அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள், அரசியலவாதிகள், பெண்ணிய அமைப்பை சேர்ந்தவர்கள் பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த பிரபல நடிகைக்கு ஆதரவாக இயக்குநர் சேரன், ஆர்.கே.செல்வமணி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

ஆனால், நடிகர் விஜய், கமல்ஹாசன் ஆகியோர் த்ரிஷாவுக்கு ஆதரவாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய், தன்னுடன் நடித்த சக நடிகைக்காகவும் ஆதரவு கொடுக்கவில்லை. அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் அரசியல்வாதியாக பெண் ஒருவருக்கும் அவர் குரல் கொடுக்க தவறி விட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல், அரசியலில் இறங்கி மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்ததாக சொல்லும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனும் பிரபல நடிகைக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு தள்ளி வைப்பு!

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அந்த பிரபல நடிகை தனது சமூக வலைதளப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்ததுடன். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஏ.வி.ராஜு பேசிய வீடியோவில், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் பற்றியும் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது வெங்கடாச்சலம் சார்பில் ஏ.வி.ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 24 மணிநேரத்திற்குள் ஏ.வி.ராஜு பொது இடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலத்துடனான தனிப்பட்ட பகை காரணமாகவே ஆதாரம் எதுவும் இல்லாமல் ஏ.வி.ராஜு இதுபோன்று அவதூறுகளை அள்ளித்தூவியதாக கூறுகிறார்கள்.

click me!