ஓடவும்  முடியாது ஒளியவும் முடியாது: அரசுப் பணியாளர்களின் முழு பணி வரலாறும் கணினி மயமாகிறது...

First Published May 29, 2018, 8:49 AM IST
Highlights
whole work history of government employees is computerised


தேனி
 
அரசுப் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக கணினிமயமாகிறது என்று அரசு முதன்மை செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.

தேனி மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட பயிற்சி வகுப்பு கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. 

இந்தப் பயிற்சி வகுப்பை அரசு முதன்மை செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் ஆணையருமான தென்காசி சு.ஜவஹர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். 

இதில், அரசு முதன்மை செயலர் தென்காசி சு.ஜவஹர், "தமிழக அரசு உத்தரவின்படி, நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட செயல்பட மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை சேர்க்கப்பட உள்ளன.

இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு ரூ.288 கோடியே 91 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்தினை செயல்படுத்தக் கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளது.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழக முழுவதும் உள்ள சுமார் 29 ஆயிரம் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பித்திடவும், அரசின் வருவாயை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அரசின் நிகழ் நேர வரவினை உடனுக்குடன் அறிய இயலும். இத்திட்டத்தின் மூலம் 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இத்திட்டத்தை வருகிற அக்டோபர் மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக கணினிமயமாகிறது.

இதன்மூலம் பணிப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியில் இருந்து விடுபட்டு, அலுவலர்கள் தங்களது துறையின் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடமுடியும். 

இதனால் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும், வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப்பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் கால விரயம் குறைவதோடு, பணிப்பதிவேடு காணாமல் போகக்கூடிய சூழ்நிலையும் முடிவுக்கு வரும். 

இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 403 அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

click me!