Rocket Raja : சொகுசு காரில் ரவுடியுடன் பயணித்த எஸ்.ஐ... அதிரடி காட்டிய எஸ்.பி.. யார் இந்த ராக்கெட் ராஜா.?

By Ajmal KhanFirst Published Jul 23, 2024, 1:28 PM IST
Highlights

கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவின் வாகனத்தில் வந்த திசையன்விளை சிறப்பு எஸ்.ஐ. ராம மூர்த்தியை நெல்லை மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் யார் இந்த ராக்கெட் ராஜா என்பதை தற்போது பார்க்கலாம்.
 

யார் இந்த ராக்கெட் ராஜா.?

1990 கால கட்டங்களில் ஜாதி ரீதியான சண்டைகள், கட்டப்பஞ்சாயத்து அடிதடி என பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் ராக்கெட் ராஜா, ராக்கெட் ராஜா மீது கொலை, ஆள்கடத்தல், துப்பாக்கியை காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.  திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடியை பூர்வீகமாக கொண்டவர்  ராஜா. ஒருவரை கடத்துவதாக இருந்தாலும் கொலை செய்வதாக இருந்தாலும்  உடனடியாக களத்தில் இறங்கி அந்த திட்டத்தை செய்து முடிப்பது வரை ராக்கெட் வேகத்தில் செயல்படுவதால் இவரை ராக்கெட் ராஜா என்று பட்டப்பெயரில் அவரது ஆதரவாளர்கள் அழைத்து வந்தனர்.

Latest Videos

வெங்கேடச பன்னையாரின் முக்கிய தளபதி

நாடார் மக்களின் முக்கிய தலைவராக இருந்த கராத்தே செல்வினில் வலது கரமாக இருந்தவர் ராக்கெட் ராஜா,  கராத்தே செல்வினை கொலை செய்த கட்டதுரை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக ராக்கெட் ராஜா சேர்க்கப்பட்டார். இதனையடுத்து  அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச வெங்கடேச பண்ணையாரிடம் ராக்கெட் ராஜா வந்து இணைந்தார். வெங்கடேச பண்ணையாரின் முக்கிய தளபதிகளில் ஒருவராக ராக்கெட் ராஜா இருந்து வந்தார். இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் வெங்கடேச வெங்கடேச பண்ணையார் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டதையடுத்து சிறிது காலம் அமைதி காத்தவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினார்.

நாங்குநேரி சாமிதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கே ட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

உயிருக்கு ஆபத்து - கதறிய ராக்கெட் ராஜா

இதற்கிடையே கடந்த 2017ஆம் ஆண்டு போலீசார் தன்னை என்கவுன்டரில் சுட்டுக்கொலை திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே எனது கடைசி வீடியோவாக இருக்கும் என வீடியோ வெளியிட்டு கதறினார் ராக்கெட் ராஜா.  அப்போது போலீசார் ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை செய்த போது  ராக்கெட் லாஞ்சர், ஏகே 47 துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்தநிலையில் தான் எப்படியாவது ராக்கெட் ராஜாவை கைது செய்ய வேண்டும் என பல முறை திட்டமிட்ட போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து ஸ்கெட்ச் போட்ட போலீசார்  கடந்த 2022ஆம் ஆண்டு  திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான நெல்லை தனிப்படை போலீசார் ராக்கெட் ராஜாவை தட்டி தூக்கினர். 

ஆனால் சிறையில் இருந்து ஒரு சில மாதங்களில் வெளியே வந்த ராக்கெட் ராஜா தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் தான்  2 கொலை மற்றும் பேருந்தை தீவைத்து எரித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவையடுத்து கடந்த 19ஆம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜரானார். அப்போது ராக்கெட் ராஜா தனது ஆதரவாளர்களோடு நீதிமன்றத்தில் கார்களில் ஊர்வலமாக வந்தார். நம்பர் பிளேட் இல்லாத காரில் வழக்கறிஞர்கள் புடைசூழ ராக்கெட் ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நெல்லையில் பதற்றம்; பேருந்தை கொளுத்திய ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள்?

எஸ்ஐ சஸ்பெண்ட்

அப்போது வழக்கு விசாரணை முடிந்து திரும்பி செல்லும் போது  திசையன்விளை சிறப்பு எஸ்.ஐ. ராம மூர்த்தி ராக்கெட் ராஜாவின் காரில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.  நீதிமன்ற பணிக்காக வந்த ராம மூர்த்தி, காவல் நிலைய வாகனத்தில் வராமல் ராக்கெட் ராஜா காரில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தான் சிறப்பு எஸ்ஐ ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து நெல்லை எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
 

click me!