
மதுரை
முத்தலாக் தடை சட்டத்தை திருத்த மோடிக்கு யார் அனுமதி அளித்தார்கள்? என்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்றும் வைகோ மதுரையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை மாவட்டம், ஓபுளாபடித்துறையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வேலுச்சாமி, கோ.தளபதி ஆகியோர் தலைமை வகித்தார்.
இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர், "மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே என் நோக்கம். பதவி ஆசை எனக்கு கிடையாது. மத்திய மந்திரி பதவியையே தூக்கி எறிந்து வந்தவன் நான்.
தி.மு.க. மீது ஒரு துரும்புகூட விழ அனுமதிக்க மாட்டேன். 30 ஆண்டுகளாக தி.மு.க.வுக்காக உழைத்துள்ளேன்.
14 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க. கொடி பறக்கும் மேடையில் பேசுகிறேன். எனக்கு கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. தாய் கழகமான தி.மு.க.வை காப்பதே எனது கடமை.
எத்தனை கட்சிகள் முளைத்தாலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஒரு குடும்பத்துக்குள் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கான அடையாளத்தை கொடுத்தவர் கருணாநிதி.
திராவிடத்தை என் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன். நானும், ம.தி.மு.க. தொண்டர்களும் பிரதிபலன் பாராமல் பணியாற்றுவோம். எதிர்காலத்தில் நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு வரும்.
மோடி ஆட்சி நாட்டுக்கு கேடு. என் மீது எத்தனை வழக்குகள் பதிவானாலும் அஞ்ச மாட்டேன். சிறைக்கு செல்ல பயப்படமாட்டேன். முத்தலாக் தடை சட்டத்தை திருத்த மோடிக்கு யார் அனுமதி அளித்தார்கள்?
கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதாக கூறுகின்றனர். ஆனால், கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகவே உள்ளது.
இந்தியாவிலேயே தமிழக போக்குவரத்துதுறைதான் மோசமாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் ஊழல் மயமாகிவிட்டன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்" என்று அவர் பேசினார்.