நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

By SG BalanFirst Published Apr 7, 2024, 10:16 PM IST
Highlights

மு.க.ஸ்டாலின் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார், என்னைப்பற்றி பேசி என்ன கிடைக்கப் போகிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் தமிழ்நாட்டிற்காக ஒன்றும் செய்யவில்லை எனவும் அவர் குறை கூறியுள்ளார்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக் கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றன. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதனால், ஓட்டுபோட்ட மக்களுக்கு விசுவாகமாக இருந்து நாடாளுமன்றத்தில் செயல்படுவதற்கு, தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கு, தேவையான திட்டங்களை பெறுவதற்கு, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக நமது கருத்துக்களை எடுத்து சொல்வதற்கு நாம் கூட்டணியில் இருந்து விலகி வந்து அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். திமுக கூட்டணியில் உள்ள 38 எம்பிக்கள் தமிழகத்திற்காக ஒன்றும் செய்யவில்லை. தான் முதல்வராக இருந்து செயல்படுத்தியதை கூறி மக்களிடம் ஸ்டாலின் வாக்கு கேட்க வேண்டும். ஆனால் பிரசாரத்தில் என்னைப் பற்றியே அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். என்னைப்பற்றி பேசி என்ன கிடைக்கப் போகிறது.

நீட் தேர்வை திமுகவும் காங்கிரசும் கொண்டுவந்தது. இன்று ரத்துசெய்வோம் என்று சொல்வதும் காங்கிரசும் திமுகவும் தான். இது வேடிக்கையாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்"

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

click me!