
Tamils trapped in Iran and Israel : ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமாகி உள்ளது. இஸ்ரேல் கடந்த ஜூன் 13 தேதியன்று "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ இலக்குகளைத் குறி வைத்து தாக்கியது, இதில் ஈரானின் 6 மூத்த அணு விஞ்ஞானிகள் மற்றும் புரட்சிகர காவல்படை தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஈரானின் நடான்ஸ், ஃபோர்டோ அணுசக்தி மையங்கள் மற்றும் இராணுவ கிடங்குகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மொசாட் உளவு அமைப்பு ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும வகையில், ஈரான் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலடி தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ், ஹைபா போன்ற நகரங்களை பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகின்று, மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தில் உள்ளது. இரு நாட்டிலும் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே ஜூன் 22 ஆம் தேதி அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கியது, இது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மோதல் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட 20 இஸ்லாமிய நாடுகள் கண்டித்துள்ளன.அடுத்த சில மணி நேரங்களில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனைகளை கொண்டு கடுமையாக தாக்கியது.ஈரான்-இஸ்ரேல் மோதல் தற்போது உச்சத்தில் உள்ளது, பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், மோதல் மேலும் மோசமடையலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் கடந்த 2023ஆம் ஆண்டே பதற்றமான நாடாக மாறியுள்ளது. அந்த வகையில் காசாவிற்கு எதிராக போர் தீவிரமாகிய நேரத்திலையே பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்பினர். இஸ்ரேலில் தமிழர்கள் தெல் அவீவ் (Tel Aviv), அஷ்கலான் (Ashkelon), அஷ்தோத் (Ashdod),ஹைஃபா (Haifa) ஆகிய இடங்களில் அதிகமான அளவில் வேலை பார்த்து வந்தனர். குறிப்பாக தொழில்நுட்ப வேலைகளில், மருத்துவத் துறை அல்லது கல்வி ஆராய்ச்சி துறையில் உள்ளனர். தற்போது இஸ்ரேல் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் கடலோர மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 700 மீனவர்கள் கிஷ் தீவில் போக்குவரத்து வசதிகள் இன்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய போர் நிலைமை காரணமாக, இவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. குறிப்பாக, உவரி பகுதியைச் சேர்ந்த 36 மீனவர்களின் குடும்பங்கள் தமிழ்நாடு அரசிடம் உடனடி மீட்பு நடவடிக்கை கோரியுள்ளனர். இந்திய அரசு "ஆபரேஷன் சிந்து" என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை 1,713 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் மஷ்ஹத் நகரில் இருந்து 285 பேர் டெல்லி வந்தடைந்தனர். ஈரானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொடர்பு எண்கள்:
இந்தியாவில்: 1800 309 3793 (கட்டணமில்லா)
வெளிநாட்டில்: +91 8069009901 / +91 8069009900
மின்னஞ்சல்: nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயல்பட்டு வருகிறது.சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது, இது தமிழர்களின் விவரங்களை சேகரித்து, மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கிறது. புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது.