
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் பங்குனி வெயிலால் மக்கள் கடும் அவதி அடைகின்றனர். இது வெறும் ஆரம்பம்தான். சித்திரையில் என்ன ஆகுமோ?
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பகலில் மிதமான வெயிலும், இரவில் கடுமையான குளிரும் நிலவியது. அந்தநிலை அப்படியே கொஞ்சம், கொஞ்சமாக மாறியது. குளிர் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போனது.
பங்குனி மாதம் தொடங்கி நான்கு நாள்களே ஆன நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. இதன் தாக்கத்தை காலை 7 மணிக்கே உணர முடிந்தது. இந்த வெயிலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தாகத்தை தணிக்க இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறுகளை பருகுகின்றனர். அனல் காற்றும் பலமாக வீசுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் குடையை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். வாகனங்களில் செல்வோர் தொப்பி அணிந்த படியும், கண்ணாடிகள் அணிந்தும், முகத்தை துணியால் மூடியபடியும் செல்கின்றனர்.
பாதசாரிகள் வேர்த்து மிகவும் சிரமப்பட்டு சென்றனர். மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியே செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
வெப்பத்தை தணிக்க குளிர்பான கடைகளை நாடுகின்றனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பாக பழச்சாறு, கரும்புச்சாறு கடைகளில் அதிக அளவு கூட்டம் இருந்தது.