கரூர்
சரக்கு, சேவை வரி உயர்வால் நெசவுத் தொழில் நலிவடையும் எனவே சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என்று பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி ஆலோசனை வழங்கினார்.
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன், மேற்கு மாவட்டச் செயலாளர் கண்ணன், நகரச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியது: “நாட்டில் விவசாயத்தையும், தொழில் வளர்ச்சியையும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் முதலீட்டாளர்கள் மற்ற மாநிலங்களுக்குச் செல்வதை தவிர்த்து தமிழகத்தில் முதலீடு செய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.
மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ளி விநியோகிப்பதில் முறைகேடு நடக்கிறது.
மழை காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரக்கு, சேவை வரி உயர்வால் நெசவுத் தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும்.
‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அதிமுக வலிமையற்று உள்ளது. சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் பாமக சந்திக்க தயாராக உள்ளது.
மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறினார்.