தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை..! தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் !

By Raghupati RFirst Published Apr 25, 2022, 12:29 PM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர மாணவ/மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, கர்நாடகாவில் தற்போது பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் ஹிஜாப் உள்பட எந்த வித மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து பள்ளி, கல்லூரிக்கு மாணவ/மாணவிகள் வர மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ/மாணவிகள் மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் பள்ளி மாணவ/மாணவிகளிடம் இருக்கக்கூடிய வேறுபாடுகளை கலையக்கூடிய நோக்கில் 1960-ம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பள்ளிகள் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை, ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ/மாணவிகள் அணிந்து வருகின்றனர்.

இது சீருடை விதிகளுக்கு எதிரானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவமின்மை ஏற்படுவதை தடுக்கவும் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை போல தமிழகத்திலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். நாகரீகமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்பதனால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு திங்கள்கிழமையான இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து, வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க : ஓகே சொன்ன கே.சி.ஆர்.. ஹேப்பியான பிரசாந்த் கிஷோர்.! அப்போ காங்கிரஸ் கதி ‘அவ்ளோதானா’ ?

click me!