விளையாட்டா போச்சா? இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது! அண்ணாமலை!

Published : Feb 18, 2025, 11:14 AM ISTUpdated : Feb 18, 2025, 11:22 AM IST
விளையாட்டா போச்சா? இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது! அண்ணாமலை!

சுருக்கம்

தமிழக காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு காலதாமதம் செய்வதாகவும், தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2023ஆம் ஆண்டுக்கான, தமிழகக் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கியதில், பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்ட இளைஞர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மே மாதம் 5ஆம் தேதி அன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. அதன்படி, ஆண்களுக்கான 469 காலிப் பணியிடங்களுக்கு, 1,45,709 பேர், பெண்களுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு, 40,901 பேர் என, மொத்தமாக 1,86,610 இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும், காவல்துறையினர் மற்றும் காவல்துறை சார்ந்த வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 20% இடங்களுக்கு, 6,101 பேர் விண்ணப்பித்திருந்தனர். 

இதையும் படிங்க:  இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து! லிஸ்ட் போட்ட தமிழக அரசு!

இதனை அடுத்து, இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26, 27 ஆகிய நாட்களில் நடைபெற்று, எழுத்துத் தேர்வு முடிவுகள், 26.09.2023 அன்று வெளியிடப்பட்டன. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு, கடந்த 07.11.2023 முதல் 10.11.2023 வரை நடைபெற்று, அவற்றில் தேர்வு பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த 19.12.2023 முதல், 10.01.2024 வரை நடைபெற்றது.  நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல், கடந்த 29.01.2024 அன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு, கைரேகைப் பதிவு உள்ளிட்டவை, 10.02.2024 முதல் 15.02.2024 வரை நடைபெற்றது. மேலும், அவர்களுக்கான கல்விச் சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க்கும் பணிகள், கடந்த 25.02.2024 முதல், 05.03.2024 வரை நடைபெற்றன. 

இதற்கிடையே, இந்த உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வில், இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 24.04.2024 அன்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுமாறு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 21.06.2024 அன்று தீர்ப்பளித்தது.  உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கூடுதலாக, 370 தேர்வாளர்களுக்குக், கடந்த 08.07.2024 அன்று உடற்தகுதித் தேர்வு நடைபெற்று, அவர்களில், 202 பேருக்கு, 05.09.2024 முதல் 08.09.2024 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக, இறுதித் தேர்வாளர்கள் பட்டியல், கடந்த 03.10.2024 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் இருந்த 41 தேர்வாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. 

கடந்த 29.01.2024 அன்று வெளியிடப்பட்டிருந்த, முதல் இறுதிப் பட்டியலில், தேர்வு செய்யப்பட்டவர்களின், எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், துறை சார்ந்தவர்களுக்கான சிறப்பு மதிப்பெண், பிறந்த தேதி, அவர்கள் சார்ந்த சமூகப் பிரிவு உள்ளிட்டவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம், இந்தத் தேர்வு முடிவுகள் வெளிப்படையாக அமைந்திருந்தன. ஆனால், கடந்த 03.10.2024 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியலில், தேர்வாளர்களின் பதிவு எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. எதன் அடிப்படையில், இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இதனால், முதல் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 41 இளைஞர்கள், முறையான விளக்கம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து, இறுதிப் பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடக் கோரி, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடரப்பட்ட வழக்கில், கடந்த 28.10.2024 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களின், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண்கள், சமூகப் பிரிவு உள்ளிட்ட 15 விவரங்களையும் இறுதிப் பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரையிலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்தது.

ஆனால், சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளாக, காவல்துறை பணிக்காகத் தங்களைத் தயார் செய்து, அனைத்துத் தேர்ச்சி முறைகளிலும் வெற்றி பெற்று, பணி ஆணை பெறக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிடத் திமுக அரசு தயங்குவது ஏன்?

இதையும் படிங்க: அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? சி.வி.சண்முகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.  அதற்கு காவல்துறை பணிகளும் விலக்கல்ல என்பதுதான், உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு, காலதாமதமாக்குவதன் மூலம் தெரிய வருகிறது. தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து, காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம், திமுக அரசுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா? திமுக அரசின் தேவையற்ற காலதாமதத்தால், இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இனியும் காலதாமதமாக்காமல், உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும். இனி வருங்காலங்களிலும், இந்த நடைமுறையைத் தொடர வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!